கலவரம் செய்யத் தூண்டிய குற்றத்துக்காக முன்னாள் உணவு விநியோக ஓட்டுநருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொங்கோல் பூங்காவில் கூடுமாறு தனிப்பட்ட நடமாட்டச் சாதனத்தைப் பயன்படுத்தியவர்களுக்கு ஃபுட்பேண்டா நிறுவனத்தில் உணவு விநியோக ஓட்டுநராகப் பணிபுரிந்த பெனி மோக் சுவீ தியேன் கைபேசி மூலம் தகவல் அனுப்பினார். ஆயுதங்களுடன் வந்து பிறருக்குக் காயம் விளைவிக்குமாறு சிங்கப்பூரரான 35 வயது மோ மோக் அவர்களைத் தூண்டினார்.
நடைபாதைகளில் மின்ஸ்கூட்டர்களை ஓட்ட நிலப் போக்கு
வரத்து ஆணையம் தடை விதித்ததை அடுத்து, இந்தக் குற்றத்தை அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று புரிந்தார்.
வன்முறையில் இறங்க பிறரைத் தூண்டிய குற்றத்துக்காக மோக்கிற்கு எட்டு வார சிறைத் தண்டனையும் $500 அபராதமும் விதிக்கப்பட்டது.
வன்முறையைத் தூண்டும் வகையில் தகவல் அனுப்பியதையும் இந்த விவகாரத்துடன் தொடர்பில்லாத திருட்டு குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார்.
மோக் இரண்டு முறை தகவல் அனுப்பியதாகவும் முதல் தகவல் 2,000க்கும் மேற்பட்டோருக்கும் இரண்டாவது தகவல் 4,000க்கும் மேற்பட்டோருக்கும் அனுப்பப்பட்டதாக அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.
தகவலைப் பார்த்த சக ஊழியர் போலிசிடம் தெரிவித்தார். விசாரணை நடத்தி அதிகாரிகள், ஹவ்காங் கடைத்தொகுதியில் மோக்கைக் கைது செய்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதியன்று பொங்கோல் பூங்காவை போலிசார் கண்காணித்தனர். ஆனால் அங்கு எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை.
கடந்த ஆண்டு அகஸ்ட் மாதம் 22ஆம் தேதியன்று நீ ஆன் சிட்டி கடைத்தொகுதியில் உள்ள கினோகுனியா புத்தகக்கடையில் ஐந்து புத்தகங்களை மோக் திருடியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சந்தேகப்படும்படியாக அவர் நடந்துகொண்டதை அடுத்து பாதுகாவல் அதிகாரியிடம் அவர் பிடிபட்டார்.