சாங்கி விமான நிலையத்தில் பயணிகளுடன் நெருங்கிப் பணியாற்ற வேண்டியுள்ள எச்சில்/சளி மாதிரி சேகரிப்பு உதவியாளர்கள் போன்ற முன்களப் பணியாளர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். அத்துடன், அவர்கள் முழுக் கவச உடை அணிந்து பணியாற்ற வேண்டும்.
கடந்த வாரம் முதல் ஏறத்தாழ 2,500 விமான நிலைய ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொண்டனர். அவர்களில் எவரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை எனச் சோதனை முடிவுகள் காட்டின. வரும் நாள்களில் இன்னும் ஆயிரம் ஊழியர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் நேற்று முன்தினம் இந்த விவரங்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.
மூன்றாவது முனைய ஊழியர்களில் இருவரை கொரோனா தொற்றியது கடந்த சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் பாதுகாவல் அதிகாரி; மற்றவர் மூன்றாவது முனையத்தில் உள்ள ‘ராஃபிள்ஸ் மெடிக்கல்ஸ்’ எச்சில்/சளி மாதிரி சேகரிப்பு உதவியாளர்.
அவர்கள் இருவரும் பயணிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் அவர்களுடன் அணுக்கத் தொடர்பில் இருந்தோரைக் கண்டறியும் வகையில் தடமறியும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.
அவ்விருவரும் முகக்கவசமும் கையுறைகளும் அணிந்திருந்தனர். ஆயினும், அவை போதாது எனக் கருதுவதால் நடைமுறையைக் கடுமையாக்க இருப்பதாக திரு ஓங் சொன்னார்.
மற்ற முன்களப் பணியாளர்கள், வெளிநாட்டு ஊழியர்களைப் போலவே, விமான நிலைய ஊழியர்களும் குறிப்பிட்ட இடைவெளியில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்றார் அவர்.
“பயணிகளுடன் நெருங்கிப் பணியாற்ற வேண்டியுள்ள ஊழியர்கள் முழுக் கவச உடை அணிய வேண்டும். தூய்மை, கிருமிநாசினி தெளிப்புப் பணிகளையும் சாங்கி விமான நிலையக் குழுமம் முடுக்கிவிடும்,” என்று அமைச்சர் கூறினார்.
2021 மார்ச்சுக்குள் புதிய பரிசோதனை ஆய்வகம்
அடுத்த ஆண்டின் முதல் காலாண்டிற்குள் சாங்கி விமான நிலையத்தில் புதிய கொவிட்-19 பரிசோதனை ஆய்வகம் திறக்கப்படும். ஒன்றரை மணி நேரத்தில் முடிவுகளை அறிந்துகொள்ளும் வகையிலான பரிசோதனைத் தொகுப்புகள் அந்த ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும்.
விரைவுப் பரிசோதனைகளை அறிமுகப்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதால், கொரோனா பாதிப்பு அபாயம் குறைவாக உள்ள நாடுகளில் இருந்து பயணிகளுக்கான காத்திருப்பு நேரம் மேலும் குறையக்கூடும் என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
இப்போது வெளிப்புற ஆய்வகங்களின் துணையுடன் நாளொன்றுக்கு 10,000 மாதிரிகள் வரை சாங்கி விமான நிலையத்தால் பரிசோதிக்க முடியும் என்றும் தேவைப்பட்டால் அந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்க முடியும் என்றும் கூறப்பட்டது.
விமான நிலையத்திலேயே புதிய ஆய்வகத்தைத் திறப்பதன் மூலம் அங்கிருந்து வேறு ஆய்வகங்களுக்கு மாதிரிகளை அனுப்ப வேண்டியதில்லை என்றும் அதிக நேரம் மிச்சமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.