போலிசார், அமலாக்க அமைப்புகளைத் தவறாகப் சித்திரிக்கும் முயற்சிகள் அதிகரித்து வருவதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் கூறியுள்ளார்.
மாது ஒருவர் சென்ற மாதம் நொவீனா ஸ்குவேர் பேரங்காடியில் கைது செய்யப்பட்ட சம்பவம், காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டது. போலிசார் தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அந்த மாதைக் காரணமில்லாமல் கைது செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இத்தகைய பொய்த் தகவல்கள், போலிசார் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது போல் சித்திரிக்கப்படுவதாக உள்ளதென்று திரு சண்முகம் குறிப்பிட்டார். இணையத்தில் இடம்பெற்ற அமைச்சர்களின் விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், அமலாக்க அமைப்புகளை இவ்வாறு தவறாகச் சித்திரிக்கும் முயற்சிகள் அதிகரித்து வருவதாகவும் சுட்டினார்.
ஆனால் இத்தகைய முயற்சிகள், போலிசாருக்கும் ஏனைய அமைப்புகளுக்கும் மிரட்டல் விடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
“போலிசார் நடவடிக்கை எடுக்கும்போது, அவர்களின் விசாரணைக்குப் பின்னால் அரசியல் காரணம் இருப்பதாகச் சிலர் கூறுவர். சட்ட அமலாக்கச் செயல்முறைகளைப் பற்றி ஆதாரமற்ற வேறு கருத்துகளையும் சொல்வர்,” என்று பகிர்ந்துகொண்டார் அமைச்சர். நம்பிக்கை மோசடி, பாலியல் துன்புறுத்தல் எனத் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கடுமையாக இருந்தால், ஒரு சிலர் விசாரணையிலிருந்து தனக்குத் தனிப்பட்ட விலக்கு அளிக்குமாறு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“ஆனால் சட்டம் என்பது அனைவருக்கும் பொது, நீங்கள் யாராக இருந்தாலும்,” என்று வலியுறுத்தினார் திரு சண்முகம்.
பேரங்காடியில் கைது செய்யப்பட்ட மாது குறித்தும் அவர் கூடுதல் விவரம் தெரிவித்தார். தற்போது மனநலக் கழகத்தில் மாது சிகிச்சை பெற்று வருவதாக அவர் சொன்னார். ஆடவர் ஒருவரின் தலை மீது உணவைக் கொட்டிய பின், அவரை நோக்கி எச்சில் உமிழ்ந்து, கையையும் கடித்தார் அந்த மாது. மாதை அணுகிய போலிஸ் அதிகாரிகளை நோக்கித் தகாத வார்த்தைகளைச் சொன்னதுடன் அவர்கள் மீதும் எச்சில் உமிழ்ந்தார். மாது அருகே இருந்த அவரின் உறவினர்களால் அவரைச் சாந்தப்படுத்தவும் முடியவில்லை.
“அந்த மாது தனக்கும் பிறருக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டார்,” என்றார் அமைச்சர் சண்முகம்.
தம் உரையில் பயங்கரவாதம், கொவிட்-19 போராட்டம் ஆகியவற்றை போலிசார் சந்திக்கும் வேறு இரண்டு முக்கிய சவால்களாக குறிப்பிட்டார் அமைச்சர்.
போலிசாரும் ஏனைய அமைப்புகளும் சமூக அளவில் ஏற்படும் தொற்றைக் குறைந்த எண்ணிக்கைக்குக் கொண்டு வர உதவியதாக அவர் கூறினார். இருப்பினும் தொற்றின் அலை மீண்டும் வரும் அபாயம் உள்ளது என்றும் நினைவுறுத்தினார்.