ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணிகளைக் கொண்டு செல்லும் டாக்சிகள், தனியார் வாடகை வாகனங்கள் ஆகியன தொடர்பில் புதிய கட்டமைப்பு நடப்புக்கு வந்துள்ளது. இதன்படி, தனியார் வாடகை வாகனங்கள் அடிக்கடி சோதனைக்கு அனுப்பப்பட வேண்டும். விபத்துக்குள்ளாகும் சாத்தியம் இல்லாதவாறு தரக் குறியீட்டை அவ்வாகனங்கள் நிறைவுச் செய்ய வேண்டும்.
மேலும், பயணச் சேவை வழங்கும் எந்த நிறுவனத்துடனும் இனி டாக்சி ஓட்டுநர்கள் ஒப்பந்தம் செய்து இணைந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பயணத்திற்கான கட்டணம் முன்னரே உறுதிசெய்யப்பட்டிருக்க வேண்டும். இத்தகைய மாற்றங்களைக் கொண்டு அமைந்த புதிய கட்டுப்பாட்டு கட்டமைப்பு நேற்று முதல் நடப்புக்கு வந்தது.
டாக்சி ஓட்டுநர்களுக்கும் தனியார் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதே இப்புதிய கட்டமைப்பின் இலக்காகும்.
பயணிகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லும் போக்குவரத்துத் துறைச் சட்டம், சென்ற ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்கீழ் இப்புதிய கட்டமைப்பு அமைந்துள்ளது.
இருப்பினும், இவ்வாண்டு ஜூன் மாதம் முதல் நடப்புக்கு வர வேண்டிய இக்கட்டமைப்பு, கொவிட்-19 நெருக்கடியால் நிறுத்தி வைக்கப்பட்டது. பயணச் சேவை வழங்குவதற்கான வாடகை நிறுவனங்களுக்கு இரு வகை உரிமங்கள் அளிக்கப்படுகின்றன.
இவற்றில் வாடகை வாகனச் சேவை வழங்கும் உரிமம் ஒன்று, பகிர்வு பயணச் சேவை வழங்கும் உரிமம் மற்றொன்று என்று தெரிவிக்கப்பட்டது.
இருவகை உரிமங்களும் மூன்று ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகக் கூடியவை என்றும் கூறப்பட்டது.
“புதிய கட்டமைப்பு நடப்புக்கு வந்த பின் நிலப் போக்குவரத்து ஆணையம், பொதுப் போக்குவரத்து மன்றம் ஆகியவற்றால் டாக்சி மற்றும் தனியார் வாடகை வாகனப் போக்குவரத்துப் பிரிவை மேலும் நன்கு கண்காணிக்க முடியும். இதனால் ஓட்டுநர்கள், பயணிகள் இருதரப்பின் பாதுகாப்பு மற்றும் ஆர்வத்தையும் உறுதிசெய்ய முடியும்,” என்று இரு தரப்பும் கூறின.
“உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில், நிறுவனங்கள் அனைத்து நிபந்தனைகளையும் நிறைவு செய்ய வேண்டும். ஆணையத்தின் பாதுகாப்புத் தரம் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். ஓட்டுநர்களுடனான பங்காளித்துவ ஏற்பாடுகள் எவ்வித பாரபட்சமும் இல்லாது அமைய வேண்டும்,” என்றும் தெரிவித்தன.