கொவிட்-19 ஆதரவு மானியத் திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 89,000 பேர் பலனடைந்துள்ளனர். மேலும், முதல் முறை மானியத் திட்டத்திற்குத் தகுதிபெற்ற 10,000 பேர் வெற்றிகரமாக இரண்டாவது முறைக்கும் விண்ணப்பித்துத் தகுதிபெற்றுள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று தம் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
கொள்ளைநோயால் வேலை இழந்தோர், சம்பளமில்லா விடுப்பில் உள்ளோர், குறிப்பிடத்தக்க ஊதிய இழப்புக்கு ஆளானோர் ஆகியவர்களுக்கு ஒரு மாதத்திற்குத் தலா $800 என மூன்று மாதங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் தகுதிபெற்று வருகின்றனர்.
பல்வேறு அரசாங்க உதவித் திட்டங்களுடன் இந்த கொவிட்-19 ஆதரவு மானியத் திட்டமும் சிங்கப்பூரர்களுக்குக் கைகொடுக்கும் என்றார் திரு மசகோஸ்.
முழுநேர, பகுதிநேர ஊழியர்களுக்கான இந்த மானியத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இறுதி நாள் இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதி. விண்ணப்பங்களை சிங்பாஸ் இணையத்தளத்தின் மூலம் சமர்ப்பிக்கலாம்.