கடந்த சில மாதங்களாக கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக வசிப்பிடம், வேலை என வேறு எங்கும் செல்ல முடியாத சூழலில் வாழும் வெளிநாட்டு ஊழியர்களில் 9 பேர், நேற்று புக்கிட் பாத்தோக் இயற்கைப் பூங்காவுக்குச் சென்று அக்கம்பக்க குடியிருப்பாளர்களுடன் கலந்துறவாடும் வாய்ப்பைப் பெற்றனர்.
Wimby எனப்படும் ‘வெல்கம் இன் மை பேக்யார்ட்’ எனும் முன்னோடித் திட்டத்தின் அங்கமாக, சுமார் 25 பேர் நடன உடற்பயிற்சி, விளையாட்டுகள், மலையேறுதல் போன்ற நடவடிக்கைகளின் ஈடுபட்டனர்.
‘டீம் நிலா’ எனப்படும் விளையாட்டு ஆர்வலர் குழு தொண்டூழியர்களும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
வெளிநாட்டு ஊழியர்களை சிங்கப்பூரர்கள் வரவேற்பதை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் தொண்டூழிய பிரசாரம்தான் Wimby.
நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊழியர்கள் கொவிட்-19லிருந்து விடுபட்டவர்கள் அல்லது கடந்த 14 நாட்களுக்குள் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொவிட்-19 தொற்று இல்லை என உறுதிபடுத்தப்பட்டவர்கள். அந்த ஊழியர்கள் அனைவரும் ஜாலான் ஜூரோங் கெச்சிலில் உள்ள முன்னாள் புக்கிட் பாத்தோக் தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தங்கும் விடுதியில் தங்கியிருப்பவர்கள்.
தங்கும் விடுதிகளில் நெரிசலைக் குறைத்து கிருமித்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில், வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்காக தற்காலிக தங்குமிடமாக மாற்றப்பட்ட, பயன்பாட்டில் இல்லாத 30 அரசாங்க சொத்துகளில் ஒன்று இது.
அத்தகைய தற்காலிக தங்குமிடங்களிலிருந்து பல ஊழியர்கள் விரைந்து கட்டப்பட்ட விடுதிகளுக்கு மாறியிருப்பதையொட்டி, சில இடங்கள் தற்போது பயன்பாட்டில் இல்லை.
மனிதவள அமைச்சு, தேசிய பூங்காக் கழகம், சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகியவை நேற்றைய இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி இருந்தன.
சில மாதங்கள் நடப்பில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாடுகளால் வெளிநாட்டு ஊழியர்களின் மன நலத்தில் தாக்கம் ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட Wimby இணைத் தலைவர் நிக்கொலஸ் ஓ, வெளிநாட்டு ஊழிய்ர்களுக்கு வேறு என்ன விதமான நடவடிக்கைகள் உதவும் என ஆரய்வதாகக் குறிப்பிட்டார்.