'தி ஆன்லைன் சிட்டிசன்' இணையத்தளத்தில் அதன் ஆசிரியர் டெரி ஸுவும் டி கோஸ்டாவும் சிங்கப்பூர் அமைச்சரவை உறுப்பினர்கள் மீது அவதூறு வாசகங்களைப் பரப்பியதாக 2018ஆம் ஆண்டில் இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்து.
'தி ஆன்லைன் சிட்டிசன்' இணையத்தளத்திற்குக் கட்டுரை எழுதியிருந்த டேனியல் டி கோஸ்டா நல்ல எண்ணத்துடன் நடந்துகொண்டதாக இந்த வழக்கில் அவருக்காக வாதிடும் வழக்கறிஞரான திரு எம்.ரவி நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் கூறினார்.
சட்டத்தின்கீழ், அரசாங்க ஊழியர்களின் நடத்தை குறித்து நல்ல எண்ணத்துடன் கருத்து கூறுவோர், அவதூறு பரப்பியதாகக் குற்றமாகாது என்று அவதூறு வழக்கின் நான்காவது நாள் விசாரணையின்போது திரு ரவி வாதிட்டார். வழக்கு விசாரணை இந்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
கட்டுரை எழுதுவதில் தமது கட்சிக்காரர் கெட்ட நோக்கத்துடன் நடந்துகொள்ளவில்லை என்று சொன்ன திரு ரவி, பிரதமர் லீ சியன் லூங்கின் உடன்பிறப்புகளான திரு லீ சியன் யாங் மற்றும் டாக்டர் லீ வெய் லிங் ஆகியோர் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகளைத்தான் அந்தக் கட்டுரையில் டி கோஸ்டா மறுபடியும் கூறியதாகச் சொன்னார். 2017ல் பிரதமரின் உடன்பிறப்புகள் வெளியிட்டிருந்த கூட்டறிக்கையில் அவர்கள் கூறியிருந்தது உண்மை என்று டி கோஸ்டா நம்பியதாகவும் அவர் சொன்னார்.
டி கோஸ்டா எழுதிய கட்டுரையை 'தி ஆன்லைன் சிட்டிசன்' இணையத் தளத்தில் ஸு வெளியிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணையில், ஸுவை பிரதிநிதித்து அவரது வழக்கறிஞர் திரு ரெமி சூ வாதிட்டார்.

