சட்ட, ஒழுங்கு தொடர்பான பொதுமக்களின் கண்ணோட்டங்கள் குறித்த குறியீடு ஒன்றில் தொடர்ச்சியாக குறைந்தது ஆறாவது ஆண்டாக சிங்கப்பூர் முதலிடம் வகிக்கிறது. கடந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ‘கேலப் 2020 உலகளாவிய சட்ட, ஒழுங்கு அறிக்கை’யில் துர்க்மெனிஸ்தானுடன் சிங்கப்பூர் முதலிடம் வகிக்கிறது. குறைந்தது 2015ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் இந்தக் குறியீட்டில் முதலிடம் வகித்து வருகிறது.
100 புள்ளிகளில் இவ்விரு நாடுகளும் 97 புள்ளிகளைப் பெற்றன. உலகளவில் சராசரியாக பெறப்பட்ட 82 புள்ளிகளைவிட இது அதிகம். இவ்விரு நாடுகளுக்கும் அடுத்த நிலையில் வந்த சீனா, 94 புள்ளிகளைப் பெற்றது. அதற்கு அடுத்ததாக ஐஸ்லாந்தும் குவைத்தும் வந்தன. அவ்விரு நாடுகளும் 93 புள்ளிகளைப் பெற்றன. ஆஸ்திரியா, நார்வே, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு சிற்றரசுகள், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இப்பட்டியலின் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. அந்த நாடுகள் 92 புள்ளிகளைப் பெற்றன.
கடந்த ஆண்டு 144 நாடுகள் மற்றும் பிரதேசங்களில், 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய கிட்டத்தட்ட 175,000 பேரிடம் நேரடியாகவும் தொலைபேசி வழியாகவும் ‘கேலப்’ நிறுவனம் கருத்துகளைக் கேட்டறிந்தது. சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரை 1,040 பேரிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன. குற்றவியல், சட்ட அமலாக்கம் தொடர்பில் மக்களின் பாதுகாப்பு உணர்வைக் கண்டறிய இந்த ஆய்வில் நான்கு கேள்விகள் கேட்கப்பட்டன. தாங்கள் வசிக்கும் பகுதியில் போலிஸ் மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளதா, இரவில் வெளியே தனியாக நடந்துசெல்வதில் பாதுகாப்பாக உணர்கின்றனரா போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. கடந்த 12 மாதங்களில் தங்களிடமிருந்தோ குடும்ப உறுப்பினர்களிடமிருந்தோ பணம் அல்லது சொத்து திருடப்பட்டதா என்பது குறித்தும் கேட்கப்பட்டது.
சிங்கப்பூரில், இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 97 விழுக்காட்டினர், இரவில் தனியாக நடந்துசெல்வதில் தாங்கள் பாதுகாப்பாக உணர்வதாகக் குறிப்பிட்டனர். உலகளவில் 69 விழுக்காட்டினர் இரவில் வெளியே நடந்துசெல்வதில் பாதுகாப்பாக உணர்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தப் பட்டியலின் ஆகக் கடைசி நிலையில் வந்தது.