சிங்கப்பூரில் கடந்த 162 ஆண்டுகளாக வர்த்தகம் செய்து வந்த ராபின்சன்ஸ் சில்லறை விற்பனைக் குழுமம் ஆர்ச்சர்ட் சாலை, ராஃபிள்ஸ் சிட்டி ஆகிய வட்டாரங்களில் இருக்கும் தனது கடைசி இரண்டு கடைகளையும் மூடுவதாக நேற்று முன்தினம் அறிவித்தது.
கடைத்தொகுதிகளின் உரிமையாளர்களுடன் பேசி வருவதாகவும் அடுத்த சில வாரங்களுக்குத் தொடர்ந்து இயங்க விரும்புவதாகவும் ராபின்சனின் நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து, ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள தி ஹீரன் கடைத்தொகுதியில் உள்ள ராபின்சன்ஸ் கடை நேற்று காலை 11 மணி அளவில் திறப்பதற்கு முன்பாகவே ஏறத்தாழ 300 பேர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கொவிட்-19 அபாயத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளியாவது இருக்க வேண்டும் என்று வரிசையில் காத்திருந்தோருக்கு நினைவூட்டப்பட்டது. தி ஹீரன் கடைத்தொகுதிக்குப் பக்கத்தில் உள்ள ஆப்பிள் ஆர்ச்சர்ட் சாலை கடை வரை வாடிக்கையாளர் வரிசை நீண்டு நெளிந்து இருந்தது.
ராபின்சன்ஸ் கடையின் கதவு திறக்கப்பட்டதும் வாடிக்கையாளர்கள் அவசரப்படாமல் ஒழுங்கான முறையில் உள்ளே சென்றனர். உள்ளே செல்வதற்கு முன்பே அவர்கள் சேஃப்என்ட்ரி செயலியில் பதிவு செய்துகொண்டனர்.
ராபின்சன்ஸ் மூடுவதற்கு முன்பு ஒருமுறை பார்க்க வேண்டும் என்பதற்காக தமது நண்பர்களுடன் அங்கு வந்ததாக 30 வயது காய் ஃபூ தெரிவித்தார்.
"பேருந்தைவிட்டு இறங்கியதும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாடிக்கையாளர் கூட்டத்தைப் பார்த்து மலைத்துவிட்டோம்," என்றார் அவர்.
சிங்கப்பூரில் ராபின்சன்சுக்கு கிட்டத்தட்ட 175 ஊழியர்கள் உள்ளனர். துபாயில் உள்ள அல் ஃபுத்தாயிம் குழுமத்தின்கீழ் ராபின்சன்ஸ் உட்பட மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர், ஸாரா போன்ற பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிறுவனங்களுக்கு ஊழியர்களை இடமாற்றம் செய்ய தன்னால் ஆன அனைத்தையும் செய்ய திட்டமிட்டுள்ளதாக ராபின்சனின் நிர்வாகம் கூறியது. நேற்று காலை 11.30 மணி அளவில் தி ஹீரன் கடைத்தொகுதியில் உள்ள ராபின்சன்ஸ் கடைக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் சென்றபோது இரண்டாவது மாடியில் உள்ள பெண்களுக்கான காலணிப் பிரிவு பாதி அளவு காலியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

