சிங்கப்பூரில் நேற்று புதிதாக நால்வருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அந்த நால்வரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். வீட்டிலேயே தங்கி இருக்கவேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப் பட்டது.
சமூகத் தொற்று யாருக்கும் இல்லை. வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியிலும் யாருக்கும் புதிதாக தொற்று இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. புதிதாக கிருமி தொற்றிய நால்வரையும் சேர்த்து இங்கு மொத்தம் 58,019 பேர் பாதிக்கப்பட்டனர். சனிக்கிழமை புதிதாக 12 பேருக்கு கெரோனா கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அந்த 12 பேருமே வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.வீட்டிலேயே தங்கி இருக்கவேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. சனிக்கிழமை சமூகத்தில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை.
சனிக்கிழமை புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் ஒரே ஒருவர் தவிர வேறு யாருக்கும் கொவிட்-19 அறிகுறிகள் வெளியே தெரியவில்லை. அமைச்சு நடத்திய பரிசோதனைகள் மற்றும் விழிப்பு நிலை காரணமாக, அவர்களுக்குத் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சனிக்கிழமை புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு பேர் சிங்கப்பூரர்கள். அவர்கள் இந்தோனீசியா, அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள். வேறு ஒருவர் இந்தோனீசியாவில் இருந்து வந்த நிரந்தரவாசி. கிரீஸ் நாட்டில் இருந்து வந்தவர் மற்றொருவர். எஞ்சிய எட்டு பேரில் இருவர் பிலிப்பீன்சில் இருந்து வந்த வேலை அனுமதிச் சீட்டு ஊழியர்கள். ஆறு பேர் இந்தோனீசியாவில் இருந்து வந்த வேலை அனுமதிச் சீட்டு ஊழியர்கள்.
இதனிடையே, கியான் டெக் டார்மிட்டரி என்ற வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் கொரோனா கிருமிப்பரவல் கடந்த 28 நாட்களாக அறவே இல்லை என்று சனிக்கிழமை அமைச்சு அறிவித்தது. சமூகத்தில் புதிய தொற்று சென்ற வாரம் 2 ஆகக் குறைந்து விட்டது என்றும் அமைச்சு குறிப்பிட்டது. சனிக்கிழமை நால்வர் குணமடைந்தனர். அவர்களையும் சேர்த்து கொவிட்-19 கிருமித் தொற்றில் இருந்து முழு குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 57,898 ஆகியது. மொத்தம் 42 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சமூக இடங்களில் 32 பேர் குணமடைந்து வருகிறார்கள்.
சிங்கப்பூரில் கொவிட்-19 காரணமாக 28 பேர் மாண்டுவிட்டனர். கொரோனா தொற்று இருந்தும் வேறு காரணங்களால் 15 பேர் மரணமடைந்தனர்.

