கொவிட்-19 காரணமாக நிதி நெருக்கடியை எதிர்நோக்கும் சிறிய நிறுவனங்களுக்கு உதவிக்கரம் காத்திருக்கிறது. அந்த நிறுவனங்கள் இரண்டு புதிய திட்டங்களின் கீழ் கடன்களைத் திருப்பி அடைப்பதில் உதவி பெற முடியும்.
ஈடு இல்லாமல் பெறப்படுகின்ற கடன்கள் அல்லது கடன்அட்டை கட்டணம் போன்ற ஈடு இல்லாத கடனை அடைப்பதில் ஒரு திட்டம் சிறிய நிறுவனங்களுக்கு உதவும்.
மற்றொரு திட்டம் மூலம் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் ஒரே நேரத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் கூடிய தங்கள் கடன்களைத் திருப்பி அடைப்பதில் உதவிகளைப் பெறலாம்.
கொவிட்-19 தொற்று காரணமாக படுமோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ள தொழில்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் திவாலாகக்கூடும் என்று கவலை நிலவுகிறது. இந்த நிலையில் சிங்கப்பூரில் உள்ள வங்கிகள் சங்கம் இந்த இரண்டு திட்டங்களையும் அமல்படுத்துகிறது.

