சிங்கப்பூரில் இஸ்லாத்தின் உண்மையான கோட்பாடுகளை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள இஸ்லாமிய சமயத் தலைவர்கள் வழிகாட்டி உதவுகிறார்கள் என்று முஸ்லிம் விவகார அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்து இருக்கிறார். அன்பு, கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற அந்தக் கோட்பாடுகள், சிங்கப்பூரிலும் சிங்கப்பூருக்கு வெளியிலும் எவை நிகழ்ந்தாலும் அதன் தொடர்பில் செயல்படுவது உள்ளிட்ட வாழ்க்கையின் எல்லா அம்சங்களுக்கும் பொருந்துகின்றன என்று அவர் தெரிவித்தார்.
உட்லண்ட்சில் இருக்கும் யூசோஃப் இஷாக் பள்ளிவாசலில் நபிகள் நாயகம் பிறந்த மாதத்தை நினைவுகூரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர், பிரான்சில் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி குறிப்பிட்டார்.அந்தச் சம்பவம் தொடர்பில் மிகவும் மிதமாக நாம் செயல்பட்டு இருக்கிறோம் என்றார் அவர்.
சிங்கப்பூரில் முஸ்லிம்கள் பகுத்தறிவுடன் நடந்துகொண்டு பல சமூகங்களும் ஒன்று மற்றொன்றை மரியாதையுடன் நடத்துகின்றன என்ற நம்பிக்கையை மற்ற சமூகங்களிடம் ஏற்படுத்துகிறார்கள் என்றார் அவர். சிங்கப்பூர் முஸ்லிம்கள் பொறுமையையும் மீள்திறனையும் வெளிப்படுத்தி வருவார்களேயானால் மற்றவர்களின் மரியாதைக்குரிய, தனிச்சிறப்பு வாய்ந்த சிறுபான்மை முஸ்லிம் சமூகமாக அவர்கள் திகழ முடியும் என்று திரு மசகோஸ் தெரிவித்தார்.
பிரான்ஸ் தாக்குதல்களை சிங்கப்பூர் தலைவர்கள் கண்டித்து இருக்கிறார்கள்.

