வேலை செய்வோர் செலுத்தும் மெடிஷீல்ட் லைஃப் சந்தாவில் ஒரு பகுதி மக்களின் வயது கூடும்போது எதிர்கால சந்தா அதிகரிப்பை ஈடுசெய்ய ஒதுக்கி வைக்கப்படும் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தத் தொகை, இத்திட்டத்தில் உள்ள எதிர்காலத் தேவைகளுக்குப் பயன்படும் வகையில், காப்புறுதித் திட்ட உரிமையாளர்களின் வாழ்நாள் முழுவதற்கும் சரிசமமான சந்தா தொகையாக விநியோகிக்க வழி ஏற்படுத்தும்.
சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய் போன்ற அதிக காலம் சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கான எதிர்கால வழங்கீடுகளை அளிப்பது திட்டத்தின் மற்றுமோர் அம்சம்.
வரவிருக்கும் மெடிஷீல்ட் லைஃப் சந்தா அதிகரிப்பு பற்றியும் அதனை பாதிப்புக்குள்ளாகும் பிரிவினர் எவ்வாறு சமாளிப்பார்கள் என்று உறுப்பினர்கள் பலர் கேள்விகள் எழுப்பினர்.
அடுத்த ஆண்டில் மெடிஷீல்ட் லைஃப் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் அதில் சந்தா அதிகரிப்பு மூன்றில் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் சுகாதார அமைச்சு கடந்த செப்டம்பரில் அறிவித்தது.
"மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் சந்தா தொகைகள் தற்போதைய மற்றும் எதிர்கால வழங்கீடுகள், எதிர்கால கடப்பாடுகளுக்கு ஆதரவளித்தல், நோய் பரவுதல் காரணமாக மருத்துவமனைச் செலவுகள் அதிகரிப்பு போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளுக்குப் பயன்படுத்தப்படும்.
"2016லிருந்து 2019 வரை மெடிஷீல்ட் லைஃப் சந்தாக்களாக $7.5 பில்லியன் வசூலிக்கப்பட்டது. இதில் $4.4 பில்லியன் காப்புறுதித் திட்ட உரிமையாளர்களிடமிருந்து நேரடியாக வசூலிக்கப்பட்டது.
"சந்தா தொடர்பான கட்டணக் கழிவுகள், இதர வகையான சந்தா ஆதரவு என்று அரசாங்கத்திடம்இருந்து $3.1 பில்லியன் திரட்டப்பட்டது.
"அதே காலகட்டத்தில், மொத்தம் $3.5 பில்லியன் சந்தாதாரர்களின் கோரிக்கைகளுக்கும் $3 பில்லியன் எதிர்கால சந்தா கட்டணக் கழிவுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது," என்றும் அமைச்சர் விளக்கினார்.
தற்போது, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பங்கள் மெடிஷீல்ட் லைஃப் சந்தாவில் 50% கட்டணக் கழிவைப் பெறுகின்றன.
மெர்டேக்கா மற்றும் முன்னோடித் தலைமுறையினர் அதற்கு மேலான கட்டணக் கழிவுகளைப் பெறுகின்றனர் என்று கூறிய டாக்டர் கோ, மொத்த சந்தாவில் 35 விழுக்காட்டு தொகையை அரசாங்கம் பல்வேறு கட்டணக் கழிவுகள் மற்றும் ஆதரவுத் திட்டங்கள் மூலம் செலுத்தியுள்ளது என்றும் சொன்னார்.
இதற்கிடையே, சுகாதாரப் பராமரிப்பு தொடர்பான பணவீக்கத்தைக் கணக்கிடுவது சிரமம் என்பதால், மெடிஷீல்ட் லைஃப் சந்தா அதிகரிப்பைச் சரிசெய்ய ஒரு குறிப்பிட்ட முறையை வகுப்பது சாத்தியமில்லை என்று கூறிய அமைச்சர், போக்குவரத்துக் கட்டண அதிகரிப்பைச் சரிசெய்ய மேற்கொள்ளப்படும் ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையைப் போல மெடிஷீல்ட் லைஃப் சந்தாவில் செய்ய முடியாது என்றார்.

