சிங்கப்பூரில் கொவிட்-19 நிலைமை மெதுவாக சீரடைந்து, மூன்றாம் கட்டத் தளர்வு நடவடிக்கைகளை நெருங்கிக் கொண்டிருந்தாலும், கட்டாய முகக்கவசம் அணியும் நடைமுறையில் மட்டும் எவ்வித மாற்றமும் இருக்காது.
வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிவது தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“வீட்டுக்கு வெளியே எல்லா நேரத்திலும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். உணவு உண்ணுதல், பானம் அருந்துதல் அல்லது கடுமையான உடற்பயிற்சி செய்தல் ஆகிய செயல்களில் ஈடுபடும்போது மக்கள் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை. ஆனால், அந்தச் செயல்கள் முடிந்தவுடன் அவர்கள் உடனடியாக முகக் கவசம் அணிய வேண்டும்.
“நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் நம்முடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் மற்றவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும் முகக்கவசம் அணிதல் பொதுச் சுகாதாரத்தின் முக்கிய அம்சமாக தொடர்ந்து விளங்கும்,” என்றும் அமைச்சர் ஃபூ விளக்கினார்.
முகக்கவசம் அணியாததற்காக முதல் முறை குற்றம் புரிபவர்களுக்கு $300 அபராதம் விதிக்கப்படும். மறுமுறை பிடிபடுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் அல்லது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
முகக்கவசம் அணியாத ஒருவர் இருமும்போது, அவரது இருமல் திரவத் துளிகள் எட்டு வினாடிகளில் ஒரு மீட்டர் தூரத்துக்கு மேல் பாயக்கூடும் என்று ஏ-ஸ்டார் அமைப்பின் அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது.
அதேவேளையில், முகக்கவசம் ஒருவரது மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் வெளியாகும் திரவத் துளிகளின் வேகத்தைக் குறைத்து, கிருமிப் பரவலைத் தடுக்கிறது.
“பாதுகாப்பு தூர இடைவெளித் தூதர்களுக்கும் அமலாக்க அதிகாரிகளுக்கும் ஆகக் கடைசி பாதுகாப்பு தூர இடைவெளி விதிமுறைகள் பற்றி அடிக்கடி விளக்கப்படுகிறது. அதில் இடங்களின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் எவ்வாறு விதிமுறைகள் பற்றி எடுத்துரைப்பது என்பதும் அடங்கும்.
“பாதுகாப்பு தூர இடைவெளித் தூதர்கள் எங்கும் எப்போதும் இருக்க மாட்டார்கள். முகக்கவசம் அணிந்துகொள்ளுமாறு அவர்கள் பொதுவாக ஆலோசனைதான் கூறுவார்கள். ஆகவே, சுயமாக விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது மக்களின் பொறுப்பாக இருக்க வேண்டும்.
“தற்போது கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருக்கிறது என்று நாம் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. நாம் தொடர்ந்து விழிப்புநிலையில் இருக்க வேண்டும், பாதுகாப்பு விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும்,” என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.