கொவிட்-19 நிலவரத்தால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், புதிய விதிமுறைகள் தொடர்பில் மற்றொரு தரப்புடன் இணக்கம் காண முடியாவிட்டால், எவ்வித தண்டப்பணமும் செலுத்தாமல் தங்கள் ஒப்பந்தங்களை முன்னதாகவே முறித்துக்கொள்ளலாம்.
நாடாளுமன்றத்தில் நேற்று சட்ட இரண்டாம் அமைச்சர் எட்வின் டோங் அறிமுகப்படுத்திய கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தில் மேலும் திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதன் தொடர்பான இரண்டாம் வாசிப்பும் விவாதமும் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறும்.
அரசாங்க ஒப்பந்தங்கள் உட்பட வர்த்தக ஒப்பந்தங்களுக்கு மட்டும் இந்த மாற்றங்கள் பொருந்தும்.
மறுசீரமைப்பு கட்டமைப்பு என்று அழைக்கப்படும் இந்தத் திருத்த மசோதா, ஒரு குறிப்பிட்ட வருமான வரம்புள்ள, கொவிட்-19 நிலவரத்தால் குறிப்பிடத்தக்க வருமான இழப்பு ஏற்பட்டுள்ள வர்த்தகங்களுக்கு மட்டும் பொருந்தும்.
இதன் தொடர்பில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் டோங், தொழில்துறை பங்காளிகளுடன் கலந்தாலோசனை நடைபெற்று வருவதாகவும் அவற்றின் முடிவில் இச்சட்டத்தில் கூடுதல் அம்சங்கள் சேர்த்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
"சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான சிறிய மற்றும் மிகச் சிறிய வர்த்தகங்களுக்கு உதவும் வகையில் மாற்றங்கள் அமையும். இந்தப் புதிய கட்டமைப்பால், சிறிய மற்றும் மிகச் சிறிய வர்த்தகங்கள் தங்கள் மறுதரப்புடன் தெரிவுகளை மறுபரிசீலனை செய்வதற்கு அதிகாரம் அளிக்கும்," என்றும் கலாசார, சமூ, இளையர்துறை அமைச்சருபான திரு டோங் விளக்கினார்.
இந்தக் கட்டமைப்புக்குத் தகுதி பெற ஒப்பந்தங்கள் சிங்கப்பூர் சட்டத்துக்கு உட்பட்டிருக்க வேண்டும். அவை கொவிட்-19 தாக்கம் தொடங்கிய மார்ச் 25ஆம் தேதிக்குள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள தரப்புகளில் குறைந்தது ஏதாவது ஒன்று சிங்கப்பூரில் வர்த்தகத்தைத் தொடங்கியிருக்க வேண்டும்.
பயனீட்டாளர், வேலைவாய்ப்பு, காப்புறுதி தொடர்பான ஒப்பந்தங்கள் இந்தக் கட்டமைப்பில் இடம்பெற முடியாது.
கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டம் நாடாளுமன்றத்தில் முதலில் இவ்வாண்டு ஏப்ரலில் நிறைவேற்றப்பட்டது. அதில் தங்கள் ஒப்பந்தங்களை ஆறு மாதங்களுக்கு தண்டப்பணம் செலுத்தாமல் ஒத்திப்போட சட்டம் வகை செய்தது.
பின்னர் ஜூன் மாதத்தில், சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
அதன்படி, கொவிட்-19 கொள்ளைநோயால் பெரிதும் பாதிக்கப்பட்ட தகுதி பெற்ற சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு, நில உரிமையாளர்கள் வாடகை நிவாரணக் கட்டமைப்பின் அடிப்படையில் வாடகை விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாண்டு செப்டம்பரில் சட்டத்தில் இரண்டாவது முறையாக திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
அதன்படி, வாடகை நிவாரணக் கட்டமைப்பின் அடிப்படையில் வாடகைத் தொகையில் எந்த அளவுக்கு விலக்கு அளிக்கலாம் என்பதை மதிப்பீட்டாளர்கள் மதிப்பீடு செய்து பரிந்துரை செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

