கொவிட்-19 கொள்ளைநோய் விளைவித்த பாதிப்புகளைச் சமாளிக்க அரசாங்கம் முன்வைத்த மூன்றாவது ஆதரவு வரவுசெலவுத் திட்டத்துக்கு தேவைப்பட்ட $8 பில்லியன் நிதி ஆதரவுக்கு அதிபர் ஹலிமா யாக்கோப் ஒப்புதல் அளித்துள்ளார் என்று நாடாளுமன்ற நாயகர் திரு டான் சுவான் ஜின் இன்று (நவம்பர் 3) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா தொடர்பில் 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு நாட்களாக விவாதித்தனர்.
இந்தக் கூடுதல் நிதி, கொவிட்-19 கிருமிப் பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு வேலை ஆதரவுத் திட்டம், வேலைநலன் சிறப்பு வழங்கீடுகள் திட்டம் மூலம் ஆதரவளிக்க பயன்படுத்தப்படும்.
இந்த மசோதாவுக்குத் தாம் ஒப்புதல் அளித்துள்ளதாக அதிபர் ஹலிமா நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
"கொவிட்-19 நிலவரத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேம்பாட்டுத் திட்டங்களுக்குச் செலவிடப்படவிருந்த நிதி இந்தச் சிறப்பு ஆதரவுத் திட்டத்துக்குத் திருப்பி விடப்பட்டது. இதன் மூலம் நாட்டின் நிதி கையிருப்பிலிருந்து கூடுதல் நிதி எடுக்கப்படவில்லை,” என்று அதிபர் விளக்கினார்.
“கொவிட்-19 நிலவரம் பெரும்பாலும் சிங்கப்பூரில் கட்டுக்குள் வந்துவிட்டது என்று சொல்லலாம். இருப்பினும், எந்த வகையிலும் கிருமிப் பரவல் மீண்டும் தலையெடுக்காத படி அரசாங்கம் மிகுந்த விழிப்பு நிலையில் உள்ளது. இந்தக் கூடுதல் நிதியைக் கொண்டு இக்கட்டான சூழ்நிலை நிலவும் வேளையில் மக்களுக்கும் வர்த்தகங்களுக்கும் அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று நம்புகிறேன்,” என்றும் அதிபர் ஹலிமா கருத்துரைத்தார்.