அக்டோபர் மாதம் 14ஆம் தேதியன்று சிங்கப்பூரில் நிகழ்ந்த மோசமான எம்ஆர்டி சேவைத் தடையின்போது, பாதியில் நின்ற ரயில்களிலிருந்து பயணிகளை மீட்கும் முயற்சியில் எஸ்எம்ஆர்டி நிறுவனம் சரியான முடிவுகளை எடுத்தது என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று ஐந்து உறுப்பினர்கள் ரயில் சேவைத் தடை பற்றி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த திரு ஓங், சேவைத் தடையின்போது ரயில் நிறுவனம் பயணிகளை ரயிலிலிருந்து மீட்டு, அவர்களை அடுத்த நிலையம் வரை தண்டவாளத்தில் நடக்க வைக்கும் முடிவை 30 நிமிடங்களுக்குள் எடுத்தாக வேண்டும் என்பது விதிமுறை.
ஆனால், எஸ்எம்ஆர்டி 40 நிமிடங்கள் கழித்துதான் பயணிகளை மீட்கும் முடிவை எடுத்தது என்று குறிப்பிட்ட அமைச்சர், மற்றொரு நிலையத்திலிருந்து மின்சாரத்தை இழுத்து, ரயில் சேவையை மீண்டும் தொடங்கலாம் என்ற நம்பிக்கை நிலவியதால் சற்று தாமதம் ஏற்பட்டது என்று விளக்கினார்.
இருப்பினும், மற்ற நிலையங்களிலிருந்து மின்சாரத்தை இழுக்கும் முயற்சியில் வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு பாதைகளில் ஓடிய ரயில்களின் சேவையும் வட்டப் பாதையில் ஒரு பகுதி சேவையும் தடைபட்டன.
மூன்று பாதைகளில் நின்றுபோன ரயில்களில் 6,800 பயணிகள் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 78 பேர், மோசமான வானிலை காரணமாக ஒரு ரயிலில் மூன்று மணி நேரம் சிக்கித் தவித்தனர். அவர்களைக் காப்பாற்ற அதிகம் நேரம் எடுத்துக்கொண்டது பற்றி பொதுமக்கள் குறைபட்டு கொண்டனர்.
ரயிலிலிருந்து பயணிகளை இறக்கும் செயல் ஒரு கடைசி முடிவாகத்தான் இருக்கும். உயர் மின்சாரம் ஓடும் மூன்றாம் தடத்தில் ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது தண்டவாளத்தில் இறங்கி பயணிகள் நடப்பதில் உள்ள ஆபத்துகளே அதற்குக் காரணம் என்று அமைச்சர் விவரித்தார்.
“750 வோல்ட் மின்சாரம் ஓடும் தண்டவாளத்துக்குப் பக்கத்தில் நடப்பது, அதுவும் அந்த இரவு வேளையில் வானிலை மோசமாக இருந்த நேரத்தில் பயணிகளை நடக்க வைப்பது ஆபத்தாக முடிந்துவிடும்.
“துவாஸ் வெஸ்ட் நீட்டிப்புப் பாதையின் மின்சார இணைப்பில் தொடர்ந்து ஏற்பட்ட மின்தடையால்தான் ரயில் சேவைத் தடை நிகழ்ந்தது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கண்டறிந்தது. இந்த சேவைத் தடையின் காரணமாக 123,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர். தடை குறித்து மேலும் ஒழுங்கு விசாரணை நடந்துகொண்டிருப்பதால், சேவை நடத்துநரின் பக்கம் தவறு இருப்பின், தண்டனை விதிக்கப்படும்,” என்றும் அமைச்சர் ஓங் தெரிவித்தார்.