சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 30,000 குறைந்த வருமான ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் ஐந்தில் நால்வர் உயர்நிலைக்குப் பிந்திய கல்வி கற்றவர்கள். அவர்களில் பாதிப் பேர் பெரும்பாலும் அலுவலக எழுத்தர்கள், உணவு, பானத்துறை ஊழியர்கள், துப்புரவாளர்கள், கடை உதவியாளர்களாக வேலை செய்கின்றனர். அவர்கள் உயர்நிலைக் கல்வி வரை பயின்றவர்கள்.
இந்த சிங்கப்பூர் ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேற்பட்டவர்களின் வயது 50க்கு மேல். உயர்நிலைக் கல்வி பெறாத இவர்கள் வேலையிழக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மாதத்துக்கு $1,300 மேற் போகாமல் சம்பாதிக்கும் ஊழியர்களின் விவரங்களை புக்கிட் பாஞ்சாங் தொகுதி உறுப்பினர் திரு லியாங் எங் ஹுவா கேட்டார்.
அதற்குப் பதிலளித்த திரு ஸாக்கி, "இந்த ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினரின் வயது 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டதாக இருக்கும். அவர்கள் விடுமுறைக் காலத்தில் பகுதிநேர வேலை செய்பவர்கள்," என்றார்.
முன்னதாக, செங்காங் குழுத் தொகுதி உறுப்பினரான பாட்டாளிக் கட்சியின் இணைப் பேராசிரியர் ஜேமஸ் லிம் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், 30,000 முழுநேர ஊழியர்களும் 22,000 சுயதொழில் செய்பவர்களும் மாதம் $1,300க்கும் குறைவான ஊதியம் ஈட்டுகிறார்கள் என்றார்.
மேலும், இந்த 30,000 சிங்கப்பூரர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் $1,300 மாதாந்திர குடும்ப வருமானம் ஈட்டுவோருடன் வசிக்கின்றனர். அப்படி என்றால் அந்தக் குடும்பத்தில் மற்றவர்களின் வருமான ஆதரவும் அவர்களுக்கு உண்டு என்று அமைச்சர் விளக்கினார்.
இந்தப் பிரிவு ஊழியர்களுக்கு வேலைநலன் கூடுதல் வருமான வழங்கீடுகள் கொடுக்கப்படுவதுடன் அவர்களுக்கு வேலைநலன் திறன்கள் ஆதரவுத் திட்டத்திலிருந்தும் உதவி கிட்டும்.
அதன் மூலம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சிகளில் சேரும்போது பயிற்சிக்கான ஊக்கத்தொகையும் பயிற்சி முடிந்தவுடன் ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்றார்.
"இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக்கொண்டு, அதிக சம்பளத்தையும் பெறுவார்கள். அத்துடன் அவர்களுக்கு அன்றாட செலவுகளுக்கும் மருத்துவ செலவுகளுக்கும் காம்கேர், ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு, முதியோர் ஆதரவு போன்ற மற்ற உதவிகளும் கிடைக்கும்," என்றும் திரு ஸாக்கி சொன்னார்.
"சிங்கப்பூரின் குறைந்த வருமான ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட முக்கிய தூண்தான் வேலைநலன் கூடுதல் வருமானத் திட்டம்.
"குறைந்த கல்வி கற்ற ஊழியர்களுக்கு வேலைநலன் திட்டம் அதிக ஊக்கத்தைத் தந்துள்ளது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. குறிப்பாக, மூத்த வயதுப் பிரிவினர் ஊழியரணியில் நுழைந்து அங்கேயே நிலைத்திருக்க இத்திட்டம் உதவுகிறது.
"இது மிகவும் முக்கிய அம்சம். காரணம், ஊழியரணி பங்கேற்பு மூலமாகத்தான் அவர்களின் குடும்ப வருமானத்தை உயர்த்த முடியும். அவர்களின் ஓய்வுகாலத்துக்காக சேமிக்க முடியும்," என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
"கடந்த 2007ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைநலன் கூடுதல் வருமானத் திட்டம் மூலம் 2019ஆம் ஆண்டு வரை, 890,000 ஊழியர்களுக்கு $6.8 மில்லியனுக்கு மேற்பட்ட தொகை வழங்கப்பட்டுள்ளது.
"கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக, 400,000 பேர் ஒவ்வோர் ஆண்டும் வேலைநலன் உதவித் தொகையைப் பெறுகிறார்கள். அவர்கள் $1,560 முதல் $3,600 வரை வழங்கீடு பெறுகிறார்கள்," என்றும் திரு ஸாக்கி கூறினார்.

