சிங்கப்பூர் ரிடிஸ்கவர்ஸ் மின்னிலக்கப் பயணத்துறை பற்றுச்சீட்டுகள் திட்டம் அடுத்த மாதம் தொடங்கும்போது, அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முதியவர்களுக்கு உதவ ஏற்பாடுகள் நடப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக மன்றங்களில் நேரடி முகப்புகள் அமைத்து அதன் மூலம் அவர்களுக்கான முன்பதிவைச் செய்தல், சிறு குழு சுற்றுலாக்களை அவர்களுக்காக ஏற்பாடு செய்தல் போன்றவை அந்த ஏற்பாடுகளில் அடங்கும் என்று வர்த்தக தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் நேற்று நாடாளுமன்றத்தில் விவரித்தார்.
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள் இந்தப் பற்றுச்சீட்டுகளை டிசம்பர் 1ஆம் தேதி முதல் தங்கள் சிங்பாஸைப் பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
2021ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதி வரை பயன்படுத்தப்படக்கூடிய இந்தப் பயணத்துறைப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்துவதில் முதியோருக்கு உதவி தேவைப் படுகிறது என்பதை அரசாங்கம் அறியும் என்று குறிப்பிட்ட திரு டான், சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், மக்கள் கழகத்துடன் இணைந்து சில சமூக மன்றங்களில் அதாவது ஒவ்வொரு வீடமைப்புப் பேட்டையிலும் குறைந்தது ஒரு சமூக மன்றத்தில் முகப்புகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றார்.
இவ்வாறு தீவு முழுவதும் மொத்தம் 66 முகப்புகள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் டான் தெரிவித்தார்.

