ரத்த அழுத்த நோயாளிகளுக்கு உதவும் வகையில் 'டெலிஹேல்த்' திட்டத்தை அனைத்து பலதுறை மருந்தகக் குழுமங்களும் அறிமுகப்படுத்துகின்றன.
வீட்டில் இருந்தவாறு புளூடூத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சாதனம் மூலம் ரத்த அழுத்த நோயாளிகள் தங்கள் ரத்த அழுத்தம் குறித்த தரவுகளைப் பலதுறை மருந்தகத்துக்கு அனுப்பலாம். இதனால் அவர்கள் அடிக்கடி பலதுறை மருந்தகத்துக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படாது.
இந்த ரத்த அழுத்த கண்காணிப்புத் திட்டம் ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு முன்பு அங் மோ கியோ பலதுறை மருந்தகத்திலும் கடந்த மாதம் பிடோக் பலதுறை மருந்தகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
அடுத்த ஆண்டின் முதல் பாதியில் கிளமெண்டி பலதுறை மருந்தகத்திலும் அந்தச் சாதனம் வழங்கப்படும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து பலதுறை மருந்தகங்களும் இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தும் என்று சுகாதார அமைச்சின் சுகாதாரப் பராமரிப்பு உருமாற்றப் பிரிவின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் டான் சோர் சுவான் தெரிவித்தார்.

