தற்போதைய கொவிட்-19 கிருமிப் பரவலால், வேலையிடங்களில் புதுவகையான சமமில்லா ஒரு நிலை ஏற்படலாம். இதன்படி 'வேலையிடத்தில் இருப்பவர்கள்', 'வேலையிடத்துடன் இணைந்தவர்கள்' என்ற இரு பிரிவினர் உருவாகலாம்.
ஒரே அலுவலகத்தில், ஒரே அறையில் அல்லது ஒரே கூட்டத்தில் நேரடியாகக் கலந்துகொள்ளும் ஊழியர்களை 'வேலையிடத்தில் இருப்பவர்கள்' என்று குறிப்பிடலாம்.
'ஸூம்' போன்ற இணையச் சந்திப்புகள் மூலம் வேலை தொடர்பாக உரையாடும் ஊழியர்களை 'வேலையிடத்துடன் இணைந்தவர்கள்' எனலாம்.
"தற்போதைய நிலையில் நேரடியாகக் கூட்டத்தில் கலந்துகொள்வது அரிதாகவும் சிரமமாகவும் ஆகிவிட்ட நிலையில், மிக முக்கியமானவர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு தரப்படுகிறது," என்று மனிதவள ஆலோசனை நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த திரு லூவிஸ் ஜெராட் குறிப்பிட்டார்.
அலுவலகத்தில் நடக்கக்கூடிய அரசியலையே இது மாற்றி அமைக்கலாம். அறையில் இல்லாதவர்களைவிட அறையில் இருப்பவர்களின் முக்கியத்துவம் மேலோங்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதலாளியை நேரில் பார்த்துப் பேசி உறவை வளர்த்துக்கொள்வது, நம்பிக்கையும் வேலையில் முன்னேற்றமும் ஏற்பட மிக முக்கியமானதாக விளங்குவதாக ஊழியர்கள் எண்ணுகின்றனர்.
"வேலை செய்வதற்காக மட்டுமே ஒருவர் தம் வேலையிடத்திற்குச் செல்வதில்லை. தாம் வேலை செய்வதைப் பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகவும் அவரின் மதிப்பைப் பிறர் அறிய வேண்டும் என்பதற்காகவும் செல்கிறார்கள்," என்றார் திரு ஜெராட்.
மற்றொரு சூழலில் ஒரே இடத்தில் அல்லாமல் வெவ்வேறு இடங்களில் இருந்தவாறு நிறுவனங்கள் தங்களின் செயல்பாடுகளில் ஈடுபடலாம். ஊழியர்களில் சிலர், கடற்கரை விடுதியில்கூட தங்கி வேலை பார்க்கலாம்.
"நிரந்தர ஏற்பாடாக வெவ்வேறு இடங்களில் இருந்தவாறு வேலை நடக்கலாம். தனிநபர் பங்களிப்பை அளவிடும் பணியை நிறுவனங்கள் மேலும் சிறப்பாகச் செய்யும் நிலையில், இத்தகைய நிரந்தர ஏற்பாடு நிகழலாம்," என்றார் திரு ஜெராட்.

