நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து, விளக்கமளித்தார் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம்
இந்தோனீசியாவைச் சேர்ந்த குமாரி பார்தி லியானி என்ற முன்னாள் பணிப்பெண் மீது திருட்டுக் குற்றம் சுமத்தியதற்குப் போதிய ஆதாரங்களும் காரணங்களும் இருந்ததாக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்து இருக்கிறார்.
அந்தப் பெண் உண்மைக்குப் புறம்பானவர் என்று புலன்விசாரணையாளர்களும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களும் மதிப்பிட்டு இருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
குமாரி லியானி விவகாரம் தொடர்பிலான அமைச்சர்நிலை அறிக்கை ஒன்றை திரு சண்முகம் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
குமாரி லியானிக்கு எதிராக சாங்கி விமான நிலையக் குழுமத்தின் முன்னாள் தலைவரான லியூ மன் லியோங்கும் அவருடைய குடும்பத்தாரும் 2016ஆம் ஆண்டில் போலிசில் புகார் தெரிவித்து இருந்தனர்.
ஆனால், திருட்டு தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் அந்தப் பெண் அண்மையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த விவகாரம் பெரும் பிரச்சினையைக் கிளப்பியது. நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றவர்களும் குற்றவியல் நீதிமுறை பற்றி கேள்வி எழுப்பினார்கள்.
இந்த நிலையில், அமைச்சர் திரு சண்முகம், நேற்று நாடாளுமன்றத்தில் அமைச்சர்நிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசினார்.
குமாரி லியானி கைதானதற்குப் பிறகு அனுமதி இல்லாமல் 10 முதல் 15 வரைப்பட்ட ஆண் உடைகளை எடுத்துக்கொண்டதாக ஒப்புக்கொண்டார். அவற்றில் சில உடைகள் தொடர்பில் அவர் அளித்த விளக்கங்கள், அவரின் வாக்குமூலங்களில் மாறுபட்டு இருந்தன என்று அமைச்சர் மன்றத்தில் குறிப்பிட்டார்.
செல்வாக்குமிக்க ஒருவர் நீதிமுறையை தனக்கு அனுகூலமாகப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறாரா, போலிசும் தலைமைச் சட்ட அலுவலகமும் நியாயமற்ற முறையில் அப்பெண் மீது வழக்குத் தொடுத்து இருக்கின்றனவா, அந்தப் பெண் நியாயமான விசாரணையைப் பெற்றாரா, பணக்காரர்களுக்கு ஒரு சட்டமும் மற்றவர்களுக்கு ஒரு சட்டமும் இருக்கிறதா, இவை எல்லாம் சிங்கப்பூருக்கு மிகவும் முக்கியமானவை என்று குறிப்பிட்ட அமைச்சர், இத்தகைய அனைத்துக்கும் தன்னுடைய அமைச்சர்நிலை அறிக்கை பதிலளிக்கும் என்றார்.
குமாரி லியானிக்கு எதிரான வழக்கு, வழக்கமான திருட்டு விவகாரமாகவே கையாளப்பட்டது. இதில் எந்த ஒருவரும் ஆதிக்கம் செலுத்த முயலவில்லை.
திருட்டுக் குற்றங்கள் இடம்பெற்று இருக்க வாய்ப்புகள் உள்ளன என்பதை வெளிப்படுத்துவதற்குப் போதிய சாட்சியம் இருந்தது என்று அமைச்சர் தெரிவித்தார்.
குமாரி லியானி 2016 டிசம்பர் 2ஆம் தேதி சிங்கப்பூருக்கு திரும்பி வந்தபோது கைதானார். அப்போது அவரிடம் இரண்டு லாங்சாம்ப் பைகள், இரண்டு கடிகாரங்கள், இரண்டு வெள்ளைநிற ஐஃபோன் 4எஸ் கைபேசிகள் இருந்தன.
அந்த இரண்டு கடிகாரங்களை நண்பர் ஒருவர் அன்பளிப்பாகக் கொடுத்தார் என்று 2016 டிசம்பர் 4ஆம் தேதி போலிஸ் வாக்குமூலத்தில் அப்பெண் தெரிவித்து இருந்தார்.
ஆனால் 2017 மே 29ஆம் தேதி அளித்த வாக்குமூலத்தின்போது அவர் வேறு மாதிரியாகக் கூறினார்.
அவ்விரு கடிகாரங்களையும் தான் திரு லியூ மன் லியோங்கின் புதல்வியான மே என்பவரின் குப்பைக்கூடையில் பார்த்ததாக அவர் சொன்னார்.
பிராடா பை, இரண்டு ஆப்பிள் ஐஃபோன்கள், ‘குச்சி’ கண்ணாடி போன்ற பொருள்களைக் குப்பையில் தான் கண்டதாக அவர் கூறியது நம்பத்தகுந்ததாக இல்லை என்று தலைமைச் சட்ட அலுவலகம் கருதியதாகவும் அமைச்சர் சண்முகம் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
குமாரி லியானியின் வாக்குமூலங்களில் காணப்பட்ட முரண்பாடு, குப்பையில் விலை உயர்ந்த பொருள்கள் காணப்பட்டதாக அவர் கூறியது, ஆண் உடைகளை எடுத்துக்கொண்டதாக அவரே ஒப்புக்கொண்டது எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கையில் அவர் மீது வழக்குத் தொடுக்க முகாந்திரம் இருக்கிறது என்பதே தலைமைச் சட்ட அலுவலகத்தின் கருத்து என்று அமைச்சர் தெரிவித்தார்.
சில நகைகளை குப்பையில் பார்த்ததாக குமாரி லியானி கூறினார். அதே வேளையில், தான் ஒருபோதும் நகைகளை தூக்கி எறிவதில்லை என்றும் தேவை இல்லாதவற்றை இரட்சண்ய சேனைக்கு அல்லது நண்பர்களுக்குத் தந்து விடுவதாக திருவாட்டி லியூ கூறினார்.
இதைப் பார்க்கும்போது, திருவாட்டி லியூவின் சாட்சியம் நம்பத்தகுந்ததாக இருக்கிறது என்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் மதிப்பிட்டது.
குமாரி லியானி மீது வழக்குத் தொடுப்பதில் தெள்ளத்தெளிவான பொதுநலன் இருக்கிறது என்றும் தலைமைச் சட்ட அலுவலகம் கருதுவதாக அமைச்சர் சொன்னார்.
நீதிமன்றத்தில் இருபது நாள்களுக்கும் மேலாக விசாரணை நடந்தது. குமாரி லியானியின் சாட்சியத்தில் கடுமையான முரண்பாடுகள் இருந்ததை மாவட்ட நீதிபதி கண்டார். அவர் லியூ குடும்பத்தினரின் சாட்சியங்களை ஏற்றுக்கொண்டார்.
பன்னிரண்டு அரசுத் தரப்பு சாட்சியங்கள், நான்கு தற்காப்புத் தரப்பு சாட்சியங்கள் ஆகியவற்றின் வாக்குமூலங்களைச் செவிமடுத்த பிறகு அந்த நீதிபதி குமாரி லியானி உண்மைக்குப் புறம்பானவர் என்பதைக் கண்டார்.
ஆயினும், குமாரி லியானியின் மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம் வேறுவிதமாகத் தீர்ப்பளித்தது.