சிங்கப்பூர் ஆயுதப் படையின் அடுத்த தலைமுறை மருத்துவ நிலையம், நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. தனிமைப்படுத்தும் அறைகள், பரிசோதனை மாதிரியை அளிக்கும் இடம் போன்ற வசதிகளுடன் கொள்ளை நோயைச் சமாளிக்கும் தயார்நிலையில் இப்புதிய நிலையம் அமைந்துள்ளது.
புதுவகை தொழில்நுட்பங்கள் கொண்ட முன்னோட்டத் திட்டங்களும் இங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. தொலை மருந்துச்சேவை, மருந்துகளைப் பெற்றுக்கொள்ள சுயச் சேவை 'லாக்கர்கள்' போன்றவை இதில் அடங்கும்.
இதனால், உடல்நலமில்லாத சேவையாளர்கள் பிறருடன் தொடர்பில் வராமல் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். திட்டம் வெற்றி பெற்றால், மற்ற ஆயுதப் படை மருத்துவ நிலையங்களிலும் இது நடப்புக்கு வரும்.
நிலையத்தைத் திறந்து வைத்த தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ், "கொவிட்-19 உலகை வந்து தாக்கும் சமயத்தில் இந்த நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதனால், வெவ்வேறு கருத்தாக்கங்களையும் வடிவமைப்புகளையும் நாம் இங்கு சோதனை செய்து கொவிட்-19 சூழலின் தேவைகளுக்கு ஏற்ப புத்தாக்கத்தை இணைக்கலாம்," என்றார்.
இவ்வாண்டு பிப்ரவரி மாதம் முதல் நிலையம் செயல்படத் தொடங்கியது.

