அப்பர் பாய லேபார் ரோட்டுக்கு அருகில் அமைந்திருக்கும் தனியார் குடியிருப்புப் பேட்டையில் உள்ள குப்பைத்தொட்டியில், அப்போதுதான் பிறந்த பச்சிளங் குழந்தையைக் கைவிட்டுச் சென்றதாக ஒப்புக்கொண்ட இந்தோனீசிய பெண்ணுக்கு இன்று (நவம்பர் 5) ஐந்து மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தாய் கெங் கார்டன்சில் உள்ள மறுபயனீட்டு குப்பைத் தொட்டியில் கடந்த மாதம் 27ஆம் தேதி அந்தப் பச்சிளங் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது.
கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை, காயங்கள் ஏதுமின்றி சீரான உடல்நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குழந்தையைக் கைவிட்ட 29 வயது பெண்ணுக்கு ஏழாண்டுகள் வரை சிறை, அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம்.
இந்தக் குற்றத்தைப் புரிந்தபோது அந்தப் பெண், பணிப்பெண் வேலைக்காக அமர்த்தப்பட்டிருந்தார்.
குப்பைத் தொட்டியில் வினோதமான சத்தம் வருவதைக் கேட்டு, அந்த குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தார், குப்பைத் தொட்டியைச் சோதனையிட்டனர்.
துண்டில் சுற்றப்பட்ட குழந்தை பிளாஸ்டிக் பையினுள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தப் பகுதி குடியிருப்பாளர்கள் வழங்கிய கண்காணிப்பு காணொளிகள், தீவிர விசாரணைக்குப் பிறகு குழந்தையைக் கைவிட்ட இந்தோனீசிய மாது அடையாளம் காணப்பட்டார்.