இலேசான அறிவுத்திறன் குறைபாடு உடைய மாணவர்களுக்கான இரு சிறப்புக் கல்விக்குரிய பள்ளிகள் வருங்காலத்தில் புது வளாகத்தில் செயல்படும். கூடுதல் எண்ணிக்கையிலான மாணவர்களுக்குக் கல்வி போதிக்க அப்பள்ளிகள் மறுசீரமைக்கப்படும்.
சாவ்யாங் பள்ளி, தங்ளின் பள்ளி இவ்விரண்டும் தொடர்புத்திறன் குறைபாடு (ஆட்டிசம்) உடைய மாணவர்களுக்குக் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தரும். சிறப்புத் தேவையுடையோருக்கான சங்கம் இவ்விரு பள்ளிகளையும் நடத்துகிறது.
அங் மோ கியோவில் முன்னாள் டாச்சியாவ் தொடக்கப் பள்ளி அமைந்திருந்த தளத்தில் 2025ஆம் ஆண்டில் இவ்விரு பள்ளிகளும் அமையவிருக்கின்றன. சாவ்யாங் பள்ளி தற்போது அங் மோ கியோவில் அமைந்துள்ளது. தங்ளின் பள்ளி புக்கிட் மேராவில் உள்ளது.
புதிய வளாகத்தில், சாவ்யாங் பள்ளி தொடக்கநிலை மாணவர்களுக்கான 400 இடங்களையும் தங்ளின் பள்ளி உயர்நிலைக்கான 350 இடங்களையும் வழங்கும். தற்போது சாவ்யாங் பள்ளியில் 320 மாணவர்களும் தங்ளின் பள்ளியில் 260 மாணவர்களும் பயில்கின்றனர்.
சாவ்யாங் பள்ளிக்கு நேற்று வருகையளித்த கல்வி துணை அமைச்சர் சுன் சூலிங், இவ்விரு சிறப்புக் கல்விக்குரிய பள்ளிகளுக்கான மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து விவரித்தார். சிங்கப்பூரின் வடகிழக்கு, மத்திய பகுதிகளில் வசிக்கும் இலேசான அறிவுத்திறன் குறைபாடு உடைய மாணவர்களுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க இந்தப் பள்ளிகள் முற்படுவதாக அவர் சொன்னார்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சருமான திருமதி சுன், ஒரே தளத்தில் இரு பள்ளிகளும் அமைந்திருந்தால் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோருக்கு சௌகரியமாக இருக்கும் என்று குறிப்பிட்டார். மாணவர்களுக்கும் பரிச்சயமான ஓர் உணர்வை இந்த ஏற்பாடு வழங்கும்.
சாவ்யாங் பள்ளியில் கல்வியை முடித்த மாணவர்களில் 95 விழுக்காட்டினர், அடுத்தகட்ட கல்விக்காக தங்ளின் பள்ளிக்கு மாறுகின்றனர்.
இவ்விரு பள்ளிகள் அமையவிருக்கும் புதிய வளாகம், மாணவர்களின் தேவைக்கேற்ப கட்டப்படும். பெரிய வகுப்பறைகள், உடற்கல்வி, விளையாட்டுகள் போன்றவற்றுக்கான இடவசதிகள் இந்த வளாகத்தில் இடம்பெறும்.
தங்ளின் பள்ளியைப் பொறுத்தவரை, அப்பள்ளி மறுசீரமைக்கப்பட்டவுடன் மாணவர்களின் தொழில்முறை பயிற்சிக்காக கூடுதல் இடம் ஒதுக்கப்படும். இதனால் பயிற்சி பெறுவதற்காக மாணவர்கள் அதிகம் அலைய வேண்டியதில்லை.
உணவு, பானம், சில்லறை விற்பனை, தோட்டக்கலை, விருந்தோபல் சேவை ஆகிய நான்கு அம்சங்களில் அப்பள்ளி தனது மாணவர்களுக்குப் பயற்சி அளிக்கிறது.
சாவ்யாங், தங்ளின் பள்ளிகள் மறுசீரமைக்கப்படும்; 2025ல் புது இடத்திற்கு மாறும்

