கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டு குணமான தாதிமை இல்ல ஊழியர்கள்
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அனைத்து தாதிமை இல்லங்களின் ஊழியர்கள் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான பரிசோத னைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இது அந்த இல்லங்களில் வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நடத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சின் பேச்சாளர், "இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தாதிமை இல்லங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் கொவிட்-19க்கு எதிரான பரிசோதைனக்குச் செல்கின்றனர்.
"சிங்கப்பூரின் தாதிமை இல்லங்களில் 9,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 16,000 முதியவர்கள் இந்த இல்லங்களில் வசிக்கின்றனர். தாதிமை இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கும் வரும் மாதங்களில் கண்காணிப்புப் பரிசோதனைகள் நடத்தப்படும்," என்றும் அவர் தெரிவித்தார்.
"தாதிமை இல்லங்களுடன் தொடர்பில் இருக்கும் தொண்டூழியர்கள், வெளிப்புற சேவை வழங்குநர்கள் போன்ற இதர பிரிவினருக்கு எவ்வாறு 'என்டிஜென்' துரிதப் பரிசோதனை போன்ற பரிசோதனையை அறிமுகப்படுத்தலாம் என்று அமைச்சு ஆராய்ந்து வருகிறது. இதன் மூலம் தாதிமை இல்லங்களில் உள்ள முதியவர்களின் பாதுகாப்பு கட்டிக்காக்கப்படுகிறது. பாதுகாப்பு தளர்வு நடவடிக்கைகள் இவ்வாண்டு இறுதியில் முழுமையாக அமல்படுப்படுவதால் அங்குள்ள முதியவர்களுக்கு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும்," என்று அந்தப் பேச்சாளர் சொன்னார்.
"முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மே மாதம் அனைத்து தாதிமை இல்ல ஊழியர்களும் வசிப்பவர்களும் கொவிட்-19க்கு எதிரான பரிசோதனைக்குச் சென்றனர்.
"அப்போது நடத்தப்பட்ட பெரிய அளவிலான பரிசோதனை நடவடிக்கையில், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் கீழ் செயல்படும் நல்வாழ்வு மற்றும் காப்பக இல்லங்களின் பணியாளர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
"சிங்கப்பூரில் உள்ள முதியோருக்கான தாதிமை இல்லங்களில் வசிப்பவர்கள், அவற்றின் ஊழியர்கள் என சுமார் 30,000 பேர் பரிசோதிக்கப்பட்டனர்.
"கடந்த ஜூலை மாத நடுப்பகுதியிலிருந்து, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் கீழ் செயல்படும் 36 முதியோருக்கான தாதிமை இல்லங்களில் வசிப்பவர்களும் ஊழியர்களும் இரு வாரங்களுக்கு ஒரு முறை 25% மூக்கு மற்றும் தொண்டை திரவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
"அப்படி என்றால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டன. தாதிமை இல்ல வருகையாளர்களுக்கு தற்போது சோதனை நடத்தப்படுவதில்லை.
"கொவிட்-19 நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணிப்பதுடன், தாதிமை இல்லங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மறுஆய்வு செய்வோம்," என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் விவரித்தார்.

