பொருளியல், பருவநிலை குறித்த நோக்கங்களுக்கு ஒரே நேரத்தில் தீர்வுகாண சிங்கப்பூர் மும்முனை அணுகுமுறையை கைகொள்ள வேண்டும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் தெரிவித்துள்ளார்.
பசுமை நிதி, குறைந்த கரியமில வாயு வெளியேற்றம், சுற்றுச்சூழல் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கான திறனை வளர்த்துக்கொள்வது ஆகியவையே அமைச்சர் குறிப்பிட்ட அந்த
அணுகுமுறைகள்.
"தன்னைப்பேணித்தனம், ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு, புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட முந்தைய போக்குகளை கொவிட்-19 நோய்ப் பரவல் முடுக்கிவிட்டுள்ளது. இப்போதைய கொரோனா நெருக்கடியோடு பருவநிலை மாற்றம் போன்ற நீண்டகாலச் சவால்களை எதிர்கொள்வது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. ஆராய்ந்து அறிந்து நீண்ட கால நோக்கில் திட்டமிடுவதுதான் எப்போதுமே வளர்ச்சிக்கான சிங்கப்பூரின் அணுகுமுறையாக இருந்து வருகிறது," என்று திரு டான் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பருவநிலை மாற்றம் குறித்த கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு பேசியபோது திரு டான் இவ்வாறு சொன்னார். கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ள அதிகமான நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

