சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடைப்பட்ட எதிர்கால ஒத்துழைப்பில் மூன்று துறைகளில் வாய்ப்புகள் இருப்பதாக வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்து இருக்கிறார்.
சீனா தன்னுடைய உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியைச் சீரமைக்கிறது. தன்னுடைய சந்தைகளையும் பொருள் சேவை விநியோக தொடர்புகளையும் பன்மயப்படுத்துகிறது.
அந்த நாட்டின் மக்கள்தொகையில் மாற்றம் இடம்பெறுகிறது. இந்த மூன்று துறைகளும் இரு நாடுகளின் எதிர்கால ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளைக் கொண்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் தொழில்துறைக் கூட்டமைப்பு சம்மேளனம் ஏற்பாடு செய்த சிங்கப்பூர்-சீன வர்த்தக முதலீட்டுக் கருத்தரங்கைத் தொடங்கிவைத்துப் பேசிய அமைச்சர், சீன அதிபர் ஸி ஜின்பிங் உருவாக்கி உள்ள ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பொருளியல் தொடர்பான இரு அம்ச உத்திகளைச் சுட்டினார்.
அந்த உத்திகள் உலகிற்குப் பல வாய்ப்புகளை வழங்குகின்றன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால் சீனச் சந்தையின் பன்மயத்தையும் சிக்கல்களையும் ஆழமாக நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.
சீனாவின் மக்கள்தொகை மூப்படைந்து வருகிறது. நகரங்களில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது என்பதைச் சுட்டிய திரு சான், தரமான உற்பத்திப் பொருட்களுக்குத் தேவை கூடுவதாகத் தெரிவித்தார். இவை எல்லாம் நிறுவனங்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன என்றார் அவர்.
பொருளியல் வளர்ச்சிக் கழகம், எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் போன்ற அரசாங்க அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட்டு சிங்கப்பூர் நிறுவனங்கள் வெளிநாட்டு சந்தைகளைச் சிறப்பாக புரிந்துகொள்ள உதவும்படி இந்தச் சம்மேளனத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.
சிங்கப்பூர்-சீன உறவுகள் கடந்த 30 ஆண்டு காலத்தில் பலமடைந்து இருப்பதை அமைச்சரும் நேற்றைய கருத்தரங்கில் உரையாற்றிய சீனாவுக்கான சிங்கப்பூர் தூதர் லூய் டக் இயூவும் சுட்டிக்காட்டினர்.
சீனா தன்னுடைய மேம்பாட்டில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுகிறது. இந்த நிலையில் சீனாவைப் பற்றி சிங்கப்பூர் அணுக்கமாகவும் ஆழமாகவும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த முயற்சிக்கு முடிவே இல்லை என்று அமைச்சர் திரு சான் குறிப்பிட்டார்.
சீனாவுடன் சிங்கப்பூர் தன்னுடைய பொருளியல் ஒத்துழைப்பை வரும் 30 ஆண்டுகளிலும் அதற்கு அப்பாலும் தொடர்ந்து அகலப்படுத்தும், ஆழப்படுத்தும் என்றும் திரு சான் தெரிவித்தார்.

