பிள்ளைகளின் உடல் நலனுக்கு ஏற்ற உணவை சிறந்த முறையில் சமைக்க உதவும் ஒரு திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
அந்தத் திட்டம், குறைந்த வருமானத்தைக் கொண்ட 800 குடும்பகளுக்கு உதவும். ஒவ்வொரு குடும்பமும் சத்துணவுப் பொட்டலம் ஒன்றைப் பெறும்.
அதில் கைக்குழந்தைகள், பாலர்பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகளுக்குப் பால், வைட்டமின்கள், கைக்குழந்தை ரொட்டிகள் எல்லாம் இருக்கும்.
இந்தப் புதிய திட்டத்தை புரூடென்ஷியல் சிங்கப்பூர் காப்புறுதி நிறுவனமும் பாலர் மேம்பாட்டு முகவையும் (ECDA) சேர்ந்து நடப்புக்கு கொண்டு வந்துள்ளன.
புதிய திட்டத்துக்கு 'ஹெல்த்தி வித் கிட்ஸ்டார்ட்' என்று பெயர்.
அந்த 800 குடும்பங்களில் 200 குடும்பங்களுக்கு அக்டோபர் மாதம் பழங்கள், காய்கறிகள் கொடுக்கப்பட்டன. இந்த மாதமும் அடுத்த மாதமும் தொடர்ந்து அவை வழங்கப்படும்.
சத்துணவுத் திட்ட தொடக்க நிகழ்ச்சி, நேற்று மரினா ஒன் பகுதியில் உள்ள புரூடென்ஷியல் அலுவலகத்தில் நடந்தது. சமுதாய, குடும்ப மேம்பாடு மற்றும் கல்வித் துணை அமைச்சர் சுன் சூலிங் அதில் கலந்துகொண்டார்.
இவர், புரூடென்ஷியல் சிங்கப்பூர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டெனிஸ் டானுடன் சேர்ந்து சத்துணவு தயாரிப்பில் ஈடுபட்டார்.
பாலர் மேம்பாட்டு முகவையின் இத்திட்டத்தில் பலன் அடையும் 800 குடும்பங்கள் ஏழு வயதுக்கும் குறைந்த வயதுள்ள பிள்ளைகளைக் கொண்டவை. குறைந்த வருமானம் உள்ளவை. இந்தக் குடும்பங்கள், புரூடென்ஷியல் சிங்கப்பூர் நடத்தும் 'பல்ஸ் கம்யூனிட்டீஸ்' என்ற இணையத் தள இணைப்பையும் பெற உதவி கிடைக்கும்.
பிள்ளைகளுக்குப் பொருத்தமான உணவு எது என்பது போன்ற சத்துணவு பற்றிய பல தகவல்களை அந்தத் தளத்தில் இக்குடும்பங்கள் பெறலாம். காணொளிகள் உதவியும் கிடைக்கும்.
இந்தக் குடும்பத்தினர், இந்த இணையத்தளம் வழியாக புரூடென்ஷியல் தொண்டூழியர்களுடன் தொடர்புகொண்டு சுகாதார ஆலோசனைகளையும் பெறலாம்.
ஒருவர் மற்றொருவருக்கு ஊக்கமூட்டி சத்தான உணவைச் சமைத்து நல்ல உணவை உண்ணவும் பரஸ்பரம் உதவிக்கொள்ளலாம்.

