தங்கள் வர்த்தகத்தில் மின்னிலக்கமயமாதலை அறிமுகப்படுத்த ஆதரவளித்ததற்காக, சில்லறை விற்பனை மற்றும் உணவுச் சேவை துறைகளில் உள்ள சுமார் 2,700 உள்ளூர் நிறுவனங்களுக்கு அரசாங்கம் கிட்டத்தட்ட $6.8 மில்லியன் தொகையை மானியமாக வழங்கியுள்ளது என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மின்னிலக்க மீள்திறனுக்கான ஊக்கத்தொகையாக வழங்கப்பட்ட அந்த மானியத் திட்டம் மூலம், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதிக்குள் தங்கள் வர்த்தகத்தில், மூன்று பிரிவுகளில் ஏதாவது ஒன்றின் வழி மின்னிலக்கத் தீர்வுகளை அறிமுகப்படுத்தும் நிறுவனங்களுக்கு $10,000 வரை மானியம் அளிக்கப்படும்.
நிறுவனங்கள் தங்கள் மனிதவளம், சம்பளம் வழங்கும் செயல்முறை, மின் வர்த்தகம் மூலம் இணையவாசல் உருவாக்கம், தரவுப் பகுப்பாய்வை தேர்வு செய்தல் போன்றவற்றில் மின்னிலக்கத்தை அறிமுகப்படுத்தலாம்.
"கொவிட்-19 விளைவுகளால் நாம் பெற்ற அனுபவம், மின்னிலக்கத் தீர்வுகளுக்கான விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்திருக்கிறது. அதன் காரணமாக, நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது," என்று அமைச்சர் ஈஸ்வரன் நேற்று ஃபூனான் கடைத்தொகுதியில் மின்னிலக்க மீள்திறனுக்கான ஊக்கத்தொகையைப் பெற்ற இரு நிறுவனங்களின் செயலாக்கத்தைப் பார்வையிடுவதற்கு முன் பேசினார்.
வடிவமைப்பு மற்றும் தோட்டக்கலையைப் பிரபலப்படுத்தும் நிறுவனமான 'த கிரீன் கேப்சுல்', மின்ன ணு வியல் பொருட்களை விற்பனை செய்யும் 'டிகே ஃபோட்டோ' ஆகியவை அந்த இரு நிறுவனங்கள்.
"இந்த விழிப்புணர்வு, கோ டிஜிட்டல் எனும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மின்னிலக்கமயமாதல் திட்டத்தில் சேரும் நிறுவனங்களின் எண்ணிக்கையை கடந்த ஆறு மாதங்களில் இரட்டிப்பாக்கி உள்ளது," என்றும் மேலும் அமைச்சர் கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 'கோ டிஜிட்டல்' திட்டம் மூலம் மின்னிலக்க மீள்திறனுக்கான ஊக்கத்தொகை, தொழில்துறை மின்னிலக்கத் திட்டங்கள், முன்னரே அனுமதியளிக்கப்பட்ட மின்னிலக்கத் தீர்வுகள் போன்ற உதவிகளை நிறுவனங்கள் பெற முடியும்.
கடந்த செப்டம்பர் மாதம் வரை 50,000 சிறிய, நடுத்தர நிறுவனங்கள் முன்னரே அனுமதியளிக்கப்பட்ட மின்னிலக்கத் தீர்வுகளை ஏற்றுக்கொண்டன என்றும் தெரி விக்கப்பட்டது.

