நொவீனா கட்டுமானத் தளத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த விபத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மரணமடைந்தார். மற்றோர் ஊழியர் காயமடைந்தார்.
இச்சம்பவத்துக்குப் பிறகு, கட்டுமானத் தளங்களில் பயன்படுத்தப்படும் பாரந்தூக்கியின் பாகங்கள் செயல்படும் விதத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
பாரந்தூக்கியில் உள்ள மேல் எழும்பச் செய்யும் கம்பி வடங்கள் அதிலிருந்து அகற்றப்பட வேண்டும் அல்லது துண்டிக்கப்பட வேண்டும். அதன் பிறகு அது வலுவாக பிணைக்கப்பட வேண்டும் என்று கூறிய அமைச்சு, வேலை நடந்துகொண்டிருக்கும்போது அந்தக் கம்பி வடங்களைப் பாரந்தூக்கியிலேயே இருக்குமாறு சில பாரந்தூக்கி தயாரிப்பாளர்கள் விட்டு விடுகின்றனர் என்றும் சுட்டியது.
மேற்கூறிய விபத்தில் நடந்தவற்றை ஒரு படிப்பினையாக ஏற்றுக்கொண்டு, பாரந்தூக்கிகளை இன்னும் பாதுகாப்பாகப் பயன்படுத்த கட்டுமானத் தொழில்துறையை ஊக்குவிக்க, அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்தக் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி டான் டோக் செங் லிங்க் சாலையில் உள்ள கட்டுமானத் தளத்தில், ஒரு பாரந்தூக்கி 300 கிலோ கிராம் எடையைத் தூக்கிக்கொண்டிருந்தபோது, அதன் செயலாக்கம் நின்றுவிட்டது.
அந்தத் தளத்தில் டான் டோக் செங் மருத்துவமனையின் ஒரு பகுதியான நோயாளிகள் மறுவாழ்வு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
பாரந்தூக்கியுடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு கம்பி வடம் சிக்கிக்கொண்டதால், பாரந்தூக்கியின் குறுக்கு உத்திரத்தால் கீழ் நோக்கி நகர முடியவில்லை.
பின்னர் திடீரென, அந்தக் கம்பி வடத்தின் சிக்கல் முடிச்சு தானாக அவிழ, அது பிடித்திருந்த குறுக்கு உத்திரம் கீழே சரியத் தொடங்கியது. இருந்தும் அதனால் விபத்து நிகழவில்லை.
நிர்ணயிக்கப்பட்ட பாரத்தின் அளவைக் காட்டிலும் கூடுதலான பாரத்தை அந்தப் பாரந்தூக்கி தூக்கவில்லை.
அந்தக் குறுக்கு உத்திரம் தூக்கியிருந்த பாரமும் அதனைப் பிடித்திருந்த கொக்கியும் விழுந்து கீழே வேலை செய்துகொண்டிருந்த இரு ஊழியர்களைத் தாக்கியது.
அந்த விபத்தில் 28 வயது இந்திய ஊழியரான முத்தையன் வேல்முருகன் மாண்டார். 35 வயது பங்ளாதேஷ் ஊழியர் ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
பாரந்தூக்கியின் உச்சியில் குறுக்கு உத்திரத்தைப் பிடித்துக்கொள்ள கம்பி வடங்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
பாரந்தூக்கியின் உச்சியில் குறுக்கு உத்திரம் பொருத்தப்பட்டவுடன் கம்பி வடங்கள் பாரந்தூக்கியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று சில பாரந்தூக்கி தயாரிப்பாளர்கள் பரிந்துரைத்தாலும், கம்பி வடங்கள் பாரந்தூக்கியிலிருந்து அகற்றப்படாமல் இருந்தால், குறுக்கு உத்திரத்தின் பராமரிப்புக்கு அது உறுதுணையாக இருக்கும் என்று சில தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
பாரத்தை மேலே கொண்டு வரும் கம்பி வடம் காரணமாக நிகழ்ந்த பாரந்தூக்கி விபத்து என்று பார்த்தால் உலகில் இதுதான் முதல் சம்பவம் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அமைச்சு, இதில் உள்ள படிப்பினைகளை நன்கு ஆராய்ந்து இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்வதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

