கடுமையான பாதுகாப்பு நிர்வாக விதிமுறைகளைக் கடைப்பிடித்தவாறு குறிப்பிட்ட சில இரவுநேர வர்த்தகங்கள் டிசம்பர் மாதத்திற்குள் மீண்டும் இயங்கத் தொடங்கலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் தொடர்பில் இரண்டு மாத முன்னோட்டத் திட்டம் ஒன்று தொடங்கவுள்ளது.
ஆடல் அரங்கில் இருப்போர் முகக்கவசம் அணிந்திருப்பது, உள்ளே நுழைவதற்கு முன் கொவிட்-19 கிருமித்தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகளை ஆதாரமாகக் காட்டுவது போன்ற நடவடிக்கைகள் இத்திட்டத்தில் அமைந்திடும்.
கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாக கொவிட்-19 நெருக்கடியால் மூட வேண்டிய நிலைக்கு உல்லாச விடுதிகள், 'கராவோக்கே' கூடங்கள், மதுபானக் கூடங்கள் போன்ற இடங்கள் தள்ளப்பட்டன. வியாபாரம் பாதிக்கப்பட்டதுடன் சில நிரந்தரமாக மூடியும் விட்டன. இந்நிலையில், இரவுநேர வர்த்தகங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதை புதிய அறிவிப்பு குறிப்பதாக உள்ளது.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் 59 இரவுக் கூடங்கள், நடன விடுதிகள், காராவோக்கே இடங்கள் மூடிவிட்டதாக கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து முன்னோட்டத் திட்டத்தில் பங்கேற்க, குறைந்த எண்ணிக்கையிலான இரவுநேர வர்த்தகங்களை அடையாளங்கண்டு வருவதாக வர்த்தக, தொழில் அமைச்சு மற்றும் உள்துறை அமைச்சு தங்கள் கூட்டறிக்கையில் தெரிவித்தன.
மதுபானக் கூடங்களுக்கான முன்னோட்டத் திட்டம் டிசம்பர் மாதத்தில் தொடங்கும். கராவோக்கே மற்றும் இரவுநேர விடுதிகளுக்கான முன்னோட்டத் திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது.
தற்போதைய கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப, இரவு 10.30 மணிக்கு மேல் மதுபானத்தை விற்கவோ அருந்தவோ அனுமதிக்கப்படாது. முன்னோட்டத் திட்டத்தில் பங்கேற்கும் வர்த்தகங்கள், கொவிட்-19 விதிகளை மீறினால், அதற்கான தண்டனையை எதிர்நோக்குவதுடன் முன்னோட்டத் திட்டத்திலிருந்தும் அகற்றப்படுவர் என்று கூறப்பட்டது.
முன்னோட்டத் திட்டத்தில் இடம்பெறாத வர்த்தகங்களுக்கு நிதி ஆதரவுத் தொகுப்புத் திட்டங்கள் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, உணவு பானத் துறை தொடர்பான செயல்பாடுகளுக்கு அவர்கள் மாறிக்கொள்ளலாம். அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையுடன் வர்த்தகத்தை மூடலாம் என்று கூறப்பட்டது.

