வெளிநாட்டு ஊழியர்களின் மனநலப் பராமரிப்பில் ஆதரவை மேம்படுத்த புதிய பணிக்குழுவை மனிதவள அமைச்சு அமைத்துள்ளது. 'புரோஜெக்ட் டோன்' என்ற பணிக்குழுவில் மனிதவள அமைச்சு, அரசாங்க உளவியலாளர்கள், மனநலக் கழகம் (ஐஎம்எச்), வெளிநாட்டு ஊழியர் நிலையம் (எம்.டபிள்யூ.சி) 'ஹெல்த்சேர்வ்' ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெறுவர்.
வெளிநாட்டு ஊழியர்களிடையே மனநலம் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தவும் பராமரிப்பு சேவைகளை அணுகுவதற்கான சிறந்த வழிமுறைகளை ஏற்படுத்தவும் ஓர் ஆதரவுக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
அடுத்த ஈராண்டுகளில், மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட உள்ள ஏழு முனை உத்திகளை இந்தக் கட்டமைப்பு கொண்டுள்ளது. முதல் கட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் நல்ல மனநல நடைமுறைகளை ஆதரிப்பதும் இடம்பெறும்.
இதில், வெளிநாட்டு ஊழியர்கள், அவர்களது கலாசாரங்களுக்கு பொருந்திப் போகும் வழிகளில் மனநலத்தைப் பேணவும் மன அழுத்தத்தைச் சமாளிக்கவும் ஊக்குவிக்கப்படுவார்கள்.
அத்துடன் அடுத்த ஆண்டில் இருந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கான அறிமுகத் திட்டத்தில் மனநலக் கல்வியும் இடம்பெறும்.
வெளிநாட்டு ஊழியர்கள் மனநல சேவைகளைப் பெறுவதற்காக வசதிகளை மேம்படுத்துவதும் அதற்கேற்ப பராமரிப்புக் கட்டமைப்பை வலுவாக்குவதும் இரண்டாவது கட்டம்.
இதன்படி, மனநலப் பிரச்சினை ஏற்படக்கூடிய அபாயத்திலுள்ள வெளிநாட்டு ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு முன்கூட்டியே தகுந்த பராமரிப்பை வழங்க, முன்களப் பணியாளர்கள், ஊழியர் தங்குமிட நிர்வாகிகள், முதலாளிகள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் தயார்படுத்தப்படுவார்கள்.
மூன்றாவது கட்டத்தில், சமூக ஒருங்கிணைப்பும் ஆதரவும் மேம்படுத்தப்படும்.
வெளிநாட்டு ஊழியர்களிடம் மனநலம் குறித்த புரிதலையும் மீள்திறனையும் வலுப்படுத்துவதுடன் அபாயத்தில் உள்ள ஊழியர்கள் முன்கூட்டியே அடையாளம் காணப்பட்டு, தகுந்த பராமரிப்பு சேவைகளைப் பெறுவதை உறுதிசெய்வதில் தான் கடப்பாடு கொண்டிருப்பதாக அமைச்சு கூறியது.

