எஸ்டோனியா, நார்வே நாடுகளுக்குக் கடந்த இரண்டு வாரங்களில் சென்றிருந்தவர்கள், வீட்டில் இருப்பதற்கான உத்தரவைக் குறிப்பிட்ட சமூக வளாகங்களில் நிறைவேற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது. அடுத்த திங்கட்கிழமை முதல் இது நடப்புக்கு வருவதாக அமைச்சு கூறியது.
இவ்விரு நாடுகளின் வருகையாளர்கள், வீட்டில் இருக்கும் உத்தரவைத் தங்களுக்கு விருப்பமான இருப்பிடத்தில் இருந்தவாறு நிறைவேற்ற அனுமதிக்கப்படுவதாக அக்டோபர் 27ஆம் தேதியன்று அமைச்சு தெரிவித்தது. ஆனால் இரண்டு நாடுகளிலும் சமீப காலமாக கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகமாகப் பதிவாகி வருவதைக் கருதி, அங்கிருந்து வருபவர்கள் குறிப்பிட்ட சமூக வளாகங்களில் உத்தரவை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டது.
ஃபின்லாந்து, ஜப்பான், தென்கொரியா, இலங்கை, தாய்லாந்து, துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து வருவோர் தொடர்ந்து விருப்பமான இருப்பிடத்தில் தங்களின் வீட்டில் இருக்கும் உத்தரவை நிறைவேற்றலாம் என்று அமைச்சு கூறியது.

