சிங்கப்பூரின் மக்கள் தொகை மூப்படைந்து வருவதாலும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கூடி வருவதாலும் இங்குள்ள சமூக மருத்துவமனைகளின் பங்களிப்பு அதிகரித்துள்ளது என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்தார்.
செயின்ட் லியுக் மருத்துவமனையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மெய்நிகர் நன்கொடை கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற திரு தர்மன், "கொவிட் நிலவரத்துக்குப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்த்து, நமது சமூக மருத்துவமனைகளின் பங்களிப்பு தொடர்ந்து வளரும். நாள்பட்ட நோயாளிகளுக்குச் சிறப்பான பராமரிப்பையும் இயன் மருத்துவம், உடல் செயல்முறை சிகிச்சை, பேச்சு சிகிச்சை போன்றவற்றை வழங்க சமூக மருத்துவ மனைகளே சிறந்த இடமாகத் திகழ்கின்றன. அவற்றின் முக்கியத்துவம் மேலும் வளர்கிறது" என்றும் திரு தர்மன் கூறினார்.

