கொவிட்-19 கொள்ளைநோய் நெருக்கடியால் இணைய வர்த்தகம் பெருமளவு அதிகரித்துள்ளது.
இச்சூழலில், கட்டணம் செலுத்தும் தளங்களும் பொருள் வாங்கும் இணையத்தளங்களும் கூடுதல் வளர்ச்சி அடையும் இலக்கைக் குறிவைத்துள்ளன.
உணவங்காடியில் சாப்பாடு வாங்குவது முதல் இணையத்தில் பொருள் வாங்குவது வரை, மின்னியல் கட்டண முறை பரவலாக இப்போது நாடப்படுகிறது.
கொள்ளைநோயால் மின்னிலக்கப் பயன்பாடு துரிதமாகியுள்ள நிலை, சில நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
கடந்த மாதங்களில் கூடுதல் பயனீட்டாளர்கள் தங்களின் சேவையைப் நாடியுள்ளதாக மின்னியல் கட்டண நிறுவனங்களும் இணைய வர்த்தக நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. புதிய பங்காளிகள், பலதரப்பட்ட சேவைகள் என தங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருவதாகவும் அவை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறின.
"தனிநபர் சுகாதாரத்தில் பயனீட்டாளர்கள் இப்போது கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். அதனால் பணத்தைக் கையில் கொடுக்கும் பழக்கம் மாறி, கை பரிமாற்றமில்லா கட்டண முறைகளை அவர்கள் பெரும்பாலும் நாடத் தொடங்கியுள்ளனர்," என்று கூறினார் டிபிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அந்தோனி சியு.
விற்பனை அதிகரிக்க, மின்னிலக்கமயமாவதன் அவசியத்தை வர்த்தகங்களும் உணர்ந்து கொண்டுள்ளன என்றார் திரு சியு.

