கடல் மற்றும் கடலோர தொழில்துறை இப்போது சவால்மிக்க காலத்தை எதிர்நோக்குகிறது என்றாலும் நீண்டகால வளர்ச்சிக்கான துறைகளைக் கொண்டுள்ள மையமாக அது திகழ்கிறது என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.
செம்ப்கார்ப் மரின் என்ற கடல் துறை பொறியியல் நிறுவனத்துக்குச் சென்ற அமைச்சர், இந்தத் தொழில்துறை பல ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது என்றாலும் இப்போது மிகவும் சவால்மிக்க காலத்தை எதிர்நோக்குவதாகக் கூறினார்.
இந்தத் துறை பொறியியல் ஆற்றல்கள் அதிகம் தேவைப்படும் ஒன்று என்பதால் ஆற்றல் மிகுந்த, தேர்ச்சிமிக்க ஊழியர்களை நீண்டகாலப் போக்கில் பலப்படுத்தி வரவேண்டிய தேவை இருக்கிறது என்பதை அமைச்சர் நினைவூட்டினார்.
நீண்டகால போக்கில் நிறுவனங்களும் ஊழியர்களும் நல்ல முறையில் மேம்படுவதற்கு உதவி கிடைக்கிறது என்பதை உறுதிப்படுத்த திட்டம் தீட்டப்பட்டு இருப்பதற்கு இதுவே காரணம் என்று திரு சான் கூறினார்.
இந்தத் தொழில்துறை உருமாறுவதற்கான முயற்சிகளை கொவிட்-19க்கு முன்பே எடுத்ததால் அதன் பலன்கள் தெரியத் தொடங்கிவிட்டதாகக் கூறிய அமைச்சர், சிங்கப்பூரின் கடல் மற்றும் கடலோர தொழில்துறை நிறுவனங்கள் பெற்ற தருவிப்பு ஆணைகளின் மதிப்பு, சென்ற ஆண்டில் $4.5 பில்லியனாக அதிகரித்தது என்றார். இந்த மதிப்பு 2016ல் $820 மில்லியன்தான்.
கப்பல் பழுதுபார்ப்பு, கப்பல் கட்டுதல், கடலில் எண்ணெய் துரப்பண மேடைகளை அமைத்தல், கடலோர பொறியியல் சேவைகள் எண்ணெய்க் கிணறு சாதனங்கள் தயாரிப்பு, கடலோர ஆதரவு கப்பல்கள், படகுகள் கட்டுமானம் மற்றும் வாடகைத் தொழில் ஆகியவை கடல் மற்றும் கடலோரத் தொழில்துறையில் உள்ளடங்கும்.
இந்தத் துறை ஏறக்குறைய 77,000 பேருக்கு வேலை கொடுக்கிறது. கெப்பல் ஆஃப்ஷோர் & மரின், செம்ப்கார்ப் மரின், எஸ்டி இன்ஜினியரிங் மரின் ஆகியவை இந்தத் துறையின் பிரம்மாண்ட நிறுவனங்கள்.
இவற்றுக்கு உறுதுணையாக சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அடங்கிய ஒரு கட்டமைப்பு செயல்படுகிறது.
கொவிட்-19 காரணமாக இத்தொழில்துறை படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிய திரு சான், இயற்கை திரவ எரிவாயு, கடலோர காற்றாலைகள், அறிவார்ந்த மற்றும் மின்னிலக்க உற்பத்தி போன்ற புதிய வளர்ச்சித் துறைகளில் இந்தத் துறை நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட முடியும் என்றார்.
"மொத்தத்தில் குறுகியகால சவால்கள் இருந்தாலும் இந்தத் துறை முன்னேறுவதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன.
"உலகுக்குத் தேவைப்படும் பொறியியல் தேவைகளை நிறைவேற்றி வைக்கும் புதிய துறைகளில் வாய்ப்புகள் உள்ளன.
"இந்தத் துறைக்கும் இதைச் சார்ந்த சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கும் தொடர்ந்து உதவி செய்யும் உறுதி உள்ளதால் இந்தச் சிரம காலத்தை வென்று நாம் முன்னேற முடியும்," என்று அமைச்சர் திரு சான் தெரிவித்தார்.
அமைச்சர் சான்: கொவிட்-19க்கு முன்பே உருமாற்ற முயற்சிகளை எடுத்ததால் பலன்

