கொவிட்-19 கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தபோது நண்பர் ஒருவருடன் டுரியான் பழங்களை வாங்குவதற்காக ஒருவர் வீட்டைவிட்டு வெளியே சென்றார்.
காரில் அவர் வேகமாகச் சென்றதைக் காட்டிய ஒரு படத்தை அவருடைய நண்பர் சமூக ஊடகத்தில் பதிவேற்றிவிட்டார்.
நாசர் ருஷ்டி நாசர் ரோஸ்லி, 21, என்ற அந்த ஆடவருக்கு நேற்று $3,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஓராண்டு காலம் வாகனத்தை ஓட்டக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.
ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியது, கொவிட்-19 கட்டுப்பாடுகளை மீறி டுரியான் பழங்களை வாங்க வீட்டைவிட்டு வெளியே சென்றது ஆகியவை தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளை நேற்று அவர் ஒப்புக்கொண்டார்.
வேறு ஒருவரை பார்ப்பதற்காக கொவிட்-19 நிபந்தனைகளை மீறி வீட்டைவிட்டு வெளியே சென்றதாகக் கூறும் மூன்றாவது குற்றச்சாட்டு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
நாசர் இந்தக் குற்றச் செயல்களை மே 9ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவர் மத்திய விரைவுச்சாலையில் சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கி 160 கி.மீ. வேகத்தில் சென்றதை காரில் இருந்த அவருடைய நண்பர் எடுத்து சமூக ஊடகத்தில் பதிவேற்றிய படம் காட்டியது.

