முன்கள தொழில்துறைகளில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையைப் போக்குவதற்கு உதவும் வகையில் நியாய ஏற்பாட்டிற்கான சிங்கப்பூர் குத்தகைதாரர்கள் ஒன்றியம் (SGTUFF) என்ற அமைப்பு வேலை சந்தையை நடத்துகிறது.
கியட் ஹோங் சமூக மன்றத்தில் இம்மாதம் 12, 13ஆம் தேதிகளில் நடக்கும் அந்தச் சந்தையில் 1,000 வேலை வாய்ப்புகளை பல்வேறு நிறுவனங்களும் வழங்கும்.
சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கிடைக்கக்கூடிய வேலைகளில் பாதிக்கும் அதிகமானவை நிபுணர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள், தொழில்நுட்பர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.
யூனியன் பவர், லெஸ் அமிஸ் குரூப், தி ஸ்பா ஸ்பிரிட் குரூப், சூப் ஸ்பூன் முதலான பல நிறுவனங்களும் தங்களிடம் உள்ள வேலை வாய்ப்புகளை அந்தச் சந்தையில் விளக்க இருக்கின்றன.
வேலைச் சந்தைக்கு ஏற்பாடு செய்யும் ஒன்றியம், கடந்த பிப்ரவரியில் தோற்றுவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் கொவிட்-19 பாதிப்புகள் தொடங்கியபோது தங்களுடைய இடங்களின் முதலாளிகள் நியாயமற்ற முறையில் நடந்துகொண்டதாக சில்லறை வர்த்தகம், உணவு, பானம் மற்றும் சேவைத் துறைகளைச் சேர்ந்த வாடகைதாரர்கள் கவலை தெரிவித்தனர்.
அந்தக் கவலையைப் போக்கும் வகையில் அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒன்றியம் ஒன்றை அமைத்தனர். இப்போது அந்த அமைப்பில் 700க்கும் அதிக தொழில் உரிமையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சுமார் 3,100 சில்லறை வர்த்தகக் கடைகளை நடத்துகிறார்கள். அவற்றில் மொத்தம் சுமார் 24,970 பேர் வேலை பார்க்கிறார்கள்.
சிங்கப்பூர் சுதந்திரம் வாங்கியதற்குப் பிறகு படுமோசமான பொருளியல் மந்தத்தை இப்போது சந்திக்கிறது. ஆட்குறைப்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்று இந்த ஒன்றியத்தின் தலைவர் டெரன்ஸ் யோவ் கூறினார்.
இருந்தாலும் இந்த ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள பல முதலாளிகளும் ஊழியர் பற்றாக்குறையை தொடர்ந்து எதிர்நோக்கி வருகிறார்கள் என்பதை அவர் சுட்டினார்.
வேலை தேடுவோருக்கு வேலையைப் பெற்றுத் தருவது இந்த ஒன்றியத்தின் நீண்டகால முன்னுரிமைகளில் ஒன்று என்று கூறிய அவர், பல்வேறு அடித்தள அமைப்புகள், அரசாங்க அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட்டு இந்த ஒன்றியம் மேலும் பல சிங்கப்பூரர்கள் முன்கள தொழில்துறைகளில் புதிய வாழ்க்கைத் தொழிலை மேற்கொள்ள முயற்சிகளை எடுத்து உள்ளதாகவும் அவர் கூறினார்.

