புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள அமெரிக்கத் தலைவர்களுக்கு சிங்கப்பூரின் அதிபர், பிரதமர், துணைப் பிரதமர் ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்காவின் 46வது அதிபராகத் தேர்ந்ெதடுக்கப்பட்டு இருக்கும் திரு ஜோ பைடன், முதல் பெண் துணை அதிபராக வென்றிருக்கும் திருவாட்டி கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் கடுமையான போட்டிக்கிடையே வெற்றி பெற்றுள்ளதாக அதிபர் ஹலிமா யாக்கோப் (இடது படம்) தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்து உள்ளார்.
குறிப்பாக, முதல் பெண் துணை அதிபராக வெற்றி பெற்று இருக்கும் திருவாட்டி கமலா, உலகம் முழுவதும் உள்ள இளம்பெண்களுக்கு ஓர் உந்துசக்தி என்றும் பல 'முதலாவது' சாதனை நிகழ்த்த அவர் இடையூறுகளைக் கடக்க அஞ்சியதில்லை என்றும் அதிபர் ஹலிமா புகழாரம் சூட்டியுள்ளார்.
"உலகளவிலும் அமெரிக்காவிலும் உள்ள சிறுபான்மை பெண்ணினத்துக்கு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம். பெண்களின் வெற்றியை எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாது என்பதை திருவாட்டி கமலா நிரூபித்துள்ளார்," என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பிரதமர் லீ தமது வாழ்த்துச் செய்தியில், திரு பராக் ஒபாமா தலைமையில் துணை அதிபராகப் பணியாற்றிய திரு ஜோ பைடனுடன் 2013ஆம் ஆண்டு சிங்கப்பூரிலும் 2016ல் வாஷிங்டனிலும் தாம் நடத்திய சந்திப்பை நினைவு கூர்ந்தார்.
சிங்கப்பூர்-அமெரிக்க பங்காளித்துவத்தை வலுப்படுத்த திரு பைடனுடன் இணைந்து பணியாற்ற நம்பிக்கை தெரிவித்த திரு லீ, "அமெரிக்காவின் தோழனாகவும் பங்காளியாகவும் தொடர்ந்து விளங்குவதை நீங்கள் காணலாம்," என திரு பைடனுக்கான வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
அதேபோல, "திருவாட்டி கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துத் தெரிவித்து உள்ள பிரதமர், இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் பலப்படுத்தவும் உங்களுடனும் திரு பைடனுடனும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெரிதும் எதிர்பார்க்கிறேன்.
அதேபோல உங்களது நேர வசதிக்கேற்ப சிங்கப்பூருக்கு மேற்கொள்ள இருக்கும் உங்களது முதல் அதிகாரபூர்வ வருகையையும் எதிர்பார்க்கிறேன்," என்று கூறியுள்ளார்.

