புவாங்கோக் கிரசென்டில் இருக்கும் தங்கள் வாடகை வீட்டை தீபாவளிக்காக அலங்கரித்துக்கொண்டிருந்த திரு சுப்பிரமணியம் (77), திருமதி வெற்றிச்செல்வி பிரேமா (70) தம்பதியருக்கு நேற்று முன்தினம் பிற்பகலில் ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோவிலில் தயாரிக்கப்பட்ட சைவ உணவு, முறுக்குப் பொட்டலங்களை அவர்களின் வீட்டிற்கு கொண்டு சென்று கொடுத்து, விழாக்கால உற்சாகத்தை ஏற்படுத்தினர் ஹுவி இயோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு உறுப்பினர்கள்.
"அமைப்புகள் சேர்ந்து இந்திய மக்களுக்கு பண்டிகைக் காலத்தின்போது செய்யும் இந்த உதவி மகத்தான ஒன்று. ஓய்வு நேரத்தின்போது பொறுமையாகவும் அன்பாகவும் எங்களுடன் உரையாடி, உணவுப் பொட்டலங்களை வழங்கி ஆதரவு தந்த தொண்டூழியர்களுக்கு நன்றி.
"சிங்கப்பூர் முழுவதும் இந்து அறக்கட்டளை வாரியம், மக்கள் கழக நற்பணிப் பேரவை போன்ற பல அமைப்புகளும் குழுக்களும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. ஒரு சமூகமாக நாம் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம் என்பதற்கு இதுபோன்ற நிகழ்வுகள் ஓர் எடுத்துக்காட்டு," என்று புன்னகை மலர்ந்த முகத்துடன் கூறினார் திரு சுப்ரமணியம்.
ஹுவி இயோ போல, மொத்தம் 11 இந்தியர் நற்பணிச் செயற் குழுக்களின் சுமார் 100 உறுப்பினர்களும் தொண்டூழியர்களும் நேற்று முன்தினம் மதியம் ஸ்ரீ சிவன் கோயிலிலிருந்து 1,000 உணவுப் பொட்டலங்களைப் பெற்று வாடகை வீடு களில் வசிக்கும் 350க்கும் மேற்பட்ட வசதி குறைந்த குடும்பங் களுக்கு விநியோகம் செய்தனர்.
இந்த உணவு அன்னதான நடவடிக்கையை இந்து அறக்கட்டளை வாரியத்தின் சமூக சேவா குழு, இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களுடன் இணைந்து நடத்தியது.
"தீபாவளி என்பது தனிமையில் கொண்டாடும் ஒரு பண்டிகை அல்ல. பகிர்தலும் பாசமும் நிறைந்த ஒன்றுதான் தீபாவளி. கொண்டாட்ட உணர்வைப் பகிர்ந்து, சமூகத்திற்கு ஆதரவு கொடுத்து இந்தப் பண்டிகை காலத்தை தொடங்குகிறோம்.
"கோவில் ஊழியர்களும் சுமார் 30 தொண்டூழியர்களும் அதிகாலையிலேயே வந்து உணவைத் தயார் செய்யத் தொடங்கினர். தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்புடனும் அக்கறையுடனும் தயார் செய்யப்பட்ட இந்த உணவு அதை பெறும் மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்ற நம்பிக்கையில் இந்த அன்னதானத்தை ஏற்பாடு செய்தோம்.
தொடர்புடைய செய்திகள்
"இதையடுத்து மக்களுக்கு எங்களது சேவையைப் புரிய தொடர்ந்து பல முயற்சிகளை எடுக்கவுள்ளோம். இந்த சவால் மிகுந்த காலகட்டத்தில் பலர் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சிரமங்களை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் ஆதரவு தருவது முக்கியம் என நாங்கள் நம்புகிறோம்," என்று உறுதியுடன் கூறினார் சமூக சேவா குழுவின் தலைவர் திருமதி சுசிலா கணேசன்.
கொவிட்-19 தொற்றுநோயால் நிதி அளவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சென்றடைய இரு அமைப்புகளும் மேற்கொள்ளும் மாதாந்திர முயற்சிகளின் ஒரு பகுதி தான் இந்த அன்னதானம்.
உணவுப் பொட்டலங்களும் முறுக்குப் பொட்டலங்களும் ஹில்வியூ, தெம்பனிஸ் சங்காட், கெபுன் பாரு, கியட் ஹோங், ஜூரோங் கிரீன், மார்சிலிங், பூன் லே, ஹெண்டர்சன், ஹுவி இயோ, தெலுக் பிளாங்கா, பெக் கியோ ஆகிய 11 வட்டாரங்களில் வசிக்கும் வசதி குறைந்த வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டன.
"உணவு விநியோக நடவடிக்கைகளை இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் பல ஆண்டுகளாக செய்து வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும் மூன்று முறை உணவு விநியோகம் செய்திருக்கிறோம். இதன் வழி குடியிருப்பாளர்களுடன் ஒரு நல்ல உறவை வளர்த்துக்கொள்வதோடு உதவி தேவைப்படுவோருக்கு கைகொடுக்க பல வாய்ப்புகளை உருவாக்குகிறோம்.
"வரும் காலத்தில் மேலும் அதிகமான நற்பணிச் செயற்குழுக்கள் இணைந்து ஈடுபடும் அறப்பணி நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்," என்று தெரிவித்தார் மக்கள் கழக நற்பணிப் பேரவையின் தலைவர் திரு கே. ராமமூர்த்தி.
திரு ரவீந்திரன் கணேசனின் தலைமையில் ஹுவி இயோ இந்தியர் நற்பணிச் செயற்குழு புவாங்கோக் கிரசென்ட் வாடகை வீடுகளுக்குச் சென்று நேற்று உணவு விநியோகம் செய்தனர்.
அக்குழுவின் துடிப்பையும் நல்லெண்ணத்தையும் பாராட்ட அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி இங் லிங் லிங் அவ்விடத்திற்கு நேரடியாக வந்திருந்தார்.
குழுவின் உற்சாகத்தைக் கண்டு, இந்திய சமூக அமைப்புகள் உதவி தேவைப்படுவோருக்கு தயங்காது முன்வந்து தங்களது ஆதரவையும் அக்கறையையும் தருவது மகிழ்ச்சியளிப்பதாக திருவாட்டி இங் கூறினார்.


