கொவிட்-19 சூழலில் பலரும் தொலைவில் இருந்து வேலை பார்ப்பதால் தொழில்நுட்பம் தொடர்பான ஆபத்துகள் கூடி இருக்கின்றன. இதன் காரணமாக நிதி நிறுவனங்கள் தங்களுடைய பாதுகாப்புக் கட்டுப்பாட்டு ஏற்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியது முக்கியமானதாக ஆகி இருக்கிறது என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
நிதி நிறுவனங்கள் எந்தெந்த செயல்கள் மூலம் ஆபத்துகள் ஏற்படலாம் என்பதைக் கண்டறிந்து அந்த ஆபத்துகளைத் தவிர்த்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று இந்த ஆணையத்தின் இணையப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகள் தெரிவித்து உள்ளன.
அந்தப் பரிந்துரைகள், இந்த ஆணையத்தின் நிர்வாகத் துறை கூட்டம் நவம்பர் 5ஆம் தேதி நடந்த போது முன்வைக்கப்பட்டன.
"கொவிட்-19 காரணமாக புதிய வேலைச் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
அத்தகைய ஒரு சூழ்நிலையில் இதுவரை சிங்கப்பூரின் நிதித்துறை தன்னுடைய இணைய மற்றும் செயல்முறை மீள்திறனைப் பொறுத்தவரை சிறப்பாகச் செயல்பட்டு வந்திருக்கிறது என்று ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் தெரிவித்தார்.
"இருந்தாலும் இந்தச் சூழ்நிலை நீடிக்கும் பட்சத்தில் அந்த மீள்திறனுக்கு அதிக நெருக்கடி ஏற்படும். இணைய மோசடி பேர்வழிகள் எந்தெந்த வழிகளில் கைவரிசை காட்டலாம் என்பதை ஆராய்ந்து வருவார்கள் என்பதே இதற்குக் காரணம்.
"ஆகையால் நிதி அமைப்புகள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து இணைய மிரட்டல்களுக்கு எதிராக தங்கள் தற்காப்பு அரணைப் பலப்படுத்த வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, கைபேசி அல்லது இணைய வங்கி போன்ற பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர்களின் அடையாளங்களைச் சரிபார்த்து தெரிந்துகொள்ள இன்னும் கடுமையான வழிகளை வங்கிகளும் காப்புறுதி நிறுவனங்களும் நிதி நிறுவனங்களும் நடப்புக்கு கொண்டு வரவேண்டி இருக்கும் என்று ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
தனிப்பட்ட ஒருவரின் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்குத் தேவைப்படக்கூடிய தகவல்கள் பற்றி ஆலோசனை அறிக்கை ஒன்றை ஆணையம் நேற்று வெளியிட்டது. ஆள்மாறாட்ட மோசடி விவகாரங்கள் அதிகரித்து வரும் சூழலில் இந்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன.
உத்தேச அறிவிப்பின்படி நிதிநிறுவனங்களுக்குச் சில அம்சங்கள் காட்டாயமாகின்றன. அதன்படி கைபேசி அல்லது இணைய வங்கி போன்றவை மூலம் வாடிக்கையாளர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும்போது நிதி நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டிய தகவல்களை அந்த உத்தேச அறிக்கை தெரிவிக்கிறது.
ரகசிய குறியீட்டு எண் அல்லது சொந்த அடையாள எண்; ஒரு நேர ரகசிய குறியீட்டு எண்; தனிப்பட்ட ஒருவரை அடையாளம் காட்டும் ரேகை முதலான தகவல்; தனிப்பட்டவருக்கும் நிதி நிறுவனத்துக்கு மட்டும் தெரிந்த தகவல் போன்றவற்றை அவை பயன்படுத்த வேண்டும்.
வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் எந்தவொரு வேண்டுகோளையும் அல்லது பரிவர்த்தனையையும் நிறைவேற்றுவதற்கு முன் இவை அவசியம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆணையத்தின் ஆலோசனை அறிக்கை அதன் இணையத்தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அவை பற்றிய கருத்துகளை டிசம்பர் 9 வரை ஆர்வமுள்ளவர்கள் தெரியப்படுத்தலாம்.

