சமூக சேவைத்துறை மின்னிலக்கமயமாவதற்கு சிங்கப்பூரின் நான்கு கல்வி நிலையங்கள் உதவ இருக்கின்றன.
அவை இந்த ஆண்டு முடிவில் தேவைக்கு ஏற்ற பொருத்தமான பயிற்சி வகுப்புகளை நடத்தும்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் கழகம், நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி, லித்தான் பயிலகம் ஆகிய நான்கு கல்வி நிலையங்களும் சமூக சேவையின் பல துறை களிலும் கவனம் செலுத்தி அத்துறை உருமாறுவதற்கு உதவும்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
தேசிய சமூக சேவை மன்றம் அந்தக் கல்வி நிலையங்களுடன் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டு இருக்கிறது. இதன்மூலம் சமூக சேவைத்துறையின் ஆற்றல் பலப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
அந்தத் துறைக்காக 2020 டிசம்பர் முதல் 2023 பிப்ரவரி வரை மின்னிலக்கப் பயிற்சி வகுப்புகளில் சுமார் 2,000 பேர் சேர்ந்து படிக்கலாம் என்று அவர் கூறினார்.
கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட டெக் அண்ட் கோ (www.go.gov.sg/tng) என்ற தொழில்நுட்ப இணைய மையத்தைப் பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து பலவற்றையும் கற்றுக்கொள்ளும் பழக்கத்தைத் தழுவிக்கொள்ளும்படி சமூக சேவை அமைப்புகளை அவர் கேட்டுக்கொண்டார்.
மின்னிலக்கப் பயிற்சி வகுப்புகளில் சேர்வது பற்றி பரிசீலிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.
புதிய பயிற்சி வகுப்புகள் சேவைத்துறையை பெரிய அளவில் உருமாற்றம் செய்யும். அந்தத் துறையின் இலக்கு நிறைவேற உதவும்.
கடப்பாடுமிக்க சமூகச் சேவை நிபுணர்களால் இயக்கப்படும் ஒரு துறையாகத் திகழ்வதும் தொண்டூழியர்கள் நிறைந்த, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்ற, மூலாதார நிலையில் சிங்கப்பூரர்களைக் கொண்ட ஒரு துறையாக திகழ வேண்டும் என்பதும் இத்துறையின் இலக்கு.
இந்த இலக்கு நிறைவேற புதிய பயிற்சி வகுப்புகள் உதவும் என்று அமைச்சர் தெரிவித்தார்.