பதினொரு வயது சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் தம்பதி கைது செய்யப்பட்டனர்.
பொதுவான நோக்கத்துடன் கொலை செய்ததாக அந்தத் தம்பதி மீது குற்றம் சாட்டப்படும்.
கைதான மாது அச்சிறுமியின் தாயார்; ஆடவர் அச்சிறுமியின் வளர்ப்புத் தந்தையாவார். கைதான இருவருக்கும் 26 வயதாகிறது.
நேற்று முற்பகல் 11 மணியளவில் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு அவசர மருத்துவ வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டபோது அந்தச் சிறுமி சுயநினைவின்றி இருந்ததாக போலிஸ் தெரிவித்தது.
அச்சிறுமி உயிரிழந்துவிட்டதாக பிற்பகல் 12.40 மணிக்கு உறுதி செய்யப்பட்டது.
இந்த இயற்கைக்கு மாறான மரணம் குறித்து அதே நாள் பிற்பகல் 1.20 மணியளவில் போலிசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையைத் தொடர்ந்து, சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த சந்தேகத்தின் பேரில் அத்தம்பதி கைது செய்யப்பட்டனர்.