முஸ்தஃபா சென்டர் கடைத்தொகுதியின் உரிமையாளர் முஸ்தாக் அஹ்மது மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீதும் தொடுக்கப்பட்ட இரண்டு வழக்குகளை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்களை வழக்குத் தொடுத்தவர்கள் அளிக்கத் தவறிவிட்டனர். எனவே இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யும்படி திரு முஸ்தாக்கின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கோரியுள்ளனர். அதனையடுத்து இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.
ஒரு திருப்புமுனையாகவும் அரிதாக நடக்கக்கூடிய வகையிலும் வழக்கறிஞர்கள் இதனை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளனர். ஏனெனில், வழக்குத் தொடர்ந்தவர்கள் தாங்கள் வாதத்தை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை நீதிமன்றத்தில் அளிக்கத் தவறிவிட்டனர் என்று முஸ்தாக் தரப்பில் கூறப்பட்டது.
முதல் வழக்கை முஸ்தாக்கின் வளர்ப்புத் தாயாரின் குடும்பத்தினரும் இரண்டாவது வழக்கை திரு முஸ்தாக்கின் முன்னாள் வர்த்தகப் பங்காளியும் திரு சம்சுதீன் முக்தார் அஹ்மதுவின் இரண்டு மகன்களும் தொடுத்திருந்தனர்.
தமது தந்தை, வளர்ப்புத் தாயார் மற்றும் வளர்ப்புத் தாயின் பிள்ளைகள் ஆகியோரை ஏமாற்றி முஸ்தஃபா சென்டர் உரிமையாளர் முஸ்தாக் அகமது தமது மனைவி, பிள்ளைகளோடு செல்வச் செழிப்புடன் இருப்பதாக முதல் வழக்கில் வாதி தரப்பில் கூறப்பட்டது.
திரு முஸ்தாக் மீதும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதும் இப் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. வழக்குத் தொடுத்தவர்கள் திரு முஸ்தாக்கின் வளர்ப்புத் தாயார் மற்றும் அவரின் ஐந்து பிள்ளைகள்.
திரு முஸ்தாக் தவிர்த்து அவரது மனைவி திருமதி இஷ்ரெத் ஜகான் மற்றும் அவர்களது பிள்ளைகள் ஷாமா மற்றும் ஒசாமா, திருமதி இஷ்ரெத்தின் சகோதரர் இக்பால் ஆகியோர் மீது புகார்கள் கூறப்பட்டன. இவர்கள் ஐந்து பேரும் நிறுவனத்தின் இயக்குநர்களாவர்.
சையது ஆல்வி ரோட்டில் உள்ள முஸ்தஃபா சென்டருக்குப் பின்னணியில் இயங்கும் 'முகம்மது முஸ்தஃபா அண்ட் சம்சுதின் கம்பெனி'யைக் கலைத்துவிட ஆணையிடுமாறு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோரின் சார்பில் திரு அயாஸ் அகமது என்பவர் கோரி இருந்தார்.
இந்த வழக்கு அக்டோபர் 13ஆம் தேதி தொடங்கி 20 நாட்களாக விசாரிக்கப்பட்டு இப்போது கடந்த திங்கட்கிழமை ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் இருபதுக்கு மேற்பட்ட சாட்சிகளை வாதி, பிரதிவாதிகளுடன் மூன்று வல்லுநர்களும் விசாரித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
2017 டிசம்பரில் முஸ்தாக்கின் வளர்ப்புத் தாயின் பிள்ளைகள் வழக்குத் தொடர்ந்தனர். அதில், 1995ஆம் ஆண்டு முதல் 2001 வரை முஸ்தாக், நிறுவனத்தின் பங்குகள் முறைதவறி ஒதுக்கப்பட்டதாக புகார் கூறியிருந்தனர். திரு அயாஸ் அஹமது தலைமையிலான இந்த வழக்கில் 14 பேர் சாட்சியம் அளித்தனர்.
2018 ஆகஸ்ட் மாதம் திரு சம்சுதீனின் மகன்கள் ஃபயஸ் மற்றும் அன்சார் ஆகியோர் முஸ்தாக்குக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். இவர்கள் முஸ்தஃபா வுக்குச் சொந்தமான சொத்துக்கள், வர்த்தகங்கள் ஆகியவற்றில் மூன்றில் ஒரு பகுதியைக் கேட்டு வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கிலும் 14 பேர் சாட்சியம் அளித்தனர்.
இந்த வழக்குகள் சார்ந்த எழுத்துபூர்வ இறுதி வாதங்களை 2021 ஜனவரி 11ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்காக வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி, இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

