மக்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிங்கப்பூரின் பொதுத் துறை தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பின் மறுவடிவமைப்பு அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிறது.
எடுத்துக்காட்டாக, அரசாங்க ஊழியர்கள் வேலையிலிருந்து விலகியவுடன் பயன்பாட்டில் இல்லாத பயனாளர் கணக்குகள் தானாகவே நீக்கப்படும். தற்போது இந்த நடைமுறை தானியக்க முறையில் இல்லை.
கடந்த ஈராண்டுகளில் பல ஊடுருவல் சம்பவங்கள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, பொதுத் துறை தகவல் பாதுகாப்பு மறுஆய்வுக் குழு முன்மொழிந்துள்ள 24 பரிந்துரைகளில் மேற்கூறப்பட்ட இந்தத் தானியக்க நடவடிக்கையும் ஒன்று.
மற்ற நடவடிக்கைகளில் ஒன்றாக, அபாயத்தை ஏற்படுத்தும் பயனாளர்களின் நடத்தையைக் கண்டறிந்து அதை நிறுத்த, தொழில்நுட்ப மற்றும் செயல்முறைக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும்.
தகவல்களை அனுப்பும்போது முக்கிய தகவல்கள் தங்களை அறியாமல் கசிவதைத் தடுக்க, தகவல்களை அனுப்புவதற்கு முன் பயனாளர்களுக்கு அது குறித்து ஒருமுறை நினைவுபடுத்தப்படும்.
சிங்கப்பூர் கணக்கியல் ஆணையத்தில் கடந்த ஆண்டு தனிப்பட்ட தகவல்கள் கசிந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், 22 அமைப்புகளைச் சேர்ந்த 41 பேரிடம் அனுப்பிய மின்னஞ்சல்களில், 6,541 தனிநபர்களின் தொடர்பு விவரங்களும் தேர்வு முடிவுகளும் அடங்கிய கோப்பு ஒன்றைத் தமக்குத் தெரியாமல் இணைத்துவிட்டார்.
2023ஆம் ஆண்டு இறுதிக்குள் மேற்கூறப்பட்ட 24 பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்க அலுவலகம் நேற்று முதன்முறையாக வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் குறிப்பிட்டது.
இதுநாள் வரை அவற்றில் 18 பரிந்துரைகளை அது நடைமுறைப்படுத்தி உள்ளது. ஒரு சில நடவடிக்கைகளை அடுத்த ஆண்டுதான் செயல்படுத்த முடியும் என்று குறிப்பிட்ட அலுவலகம், அதற்கான காரணத்தையும் விளக்கியது.
"இவை பெரிதான, சிக்கலான திட்டங்கள். இவற்றைச் செயல்படுத்த தொழில்நுட்ப முறை குறிப்பிடத்தக்க அளவு மறுவடிவமைக்கப்பட வேண்டும் என்பதால் அதற்கான அவகாசம் தேவைப்படுகிறது," என்று அது விவரித்தது.
எடுத்துக்காட்டாக, பொதுத் துறை தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பைப் பயன்படுத்த பயனாளர்களுக்கு அனுமதி வழங்கும் அல்லது ரத்து செய்யும் தானியக்க முறை 2,000 தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் அனைத்திலும் 2024ஆம் ஆண்டு இறுதிக்குள்தான் முழுமையாக செயல்படுத்தப்படும்.
அதுவரை, பயன்பாட்டில் இல்லாத பயனாளர் கணக்குகளை உடனுக்குடன் நீக்குவது குறித்து சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் தெரியப்படுத்த தொழில்நுட்ப முறை ஒன்று பயன்படுத்தப்படும்.
மக்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது

