கொவிட்-19 காலகட்டத்தையும் தாண்டி மேலும் பரிவுமிக்க, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை எப்படி உருவாக்கலாம் என்பது குறித்து உடற்குறையுள்ள 120 பேர் முன்வந்து தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். சிங்கப்பூர் தற்போது சந்தித்து வரும் சவால்கள், ஏற்பட்டுள்ள புதிய வாய்ப்புகள், நெருக்கடியிலிருந்து மேலும் வலிமை பெற்று மீண்டுவருவதற்கான தீர்வுகள் ஆகியவை குறித்து மக்களுடன் கலந்தாலோசிக்க அரசாங்கம் 'மேலும் வலிமை பெற்று எழுவதற்கான கலந்துரையாடல் தொடர்' திட்டத்தைத் தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாக உடற்குறையுடைய சமூகத்தினருடன் கடந்த வாரக் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டுவரை உடற்குறையுள்ள சமூகத்தினருக்கான தேசிய அளவிலான திட்டங்களை வழிநடத்தி வருகிறது மூன்றாவது துணைபுரியும் பெருந்திட்டம்.
சிறப்புத் தேவைகள் உடையவர்கள், அவர்களின் பராமரிப்பாளர்கள் ஆகியோரது வாழ்க்கையின் வெவ்வேறு கட்டத்தில் தகுந்த உதவி வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது இப்பெருந்திட்டம்.
பெருந்திட்டத்தின்கீழ் இயங்கி வரும் இரண்டு பணிக்குழுக்களில் தலைவர்களாக உள்ள சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, ஜாலான் புசார் குழுத்தொகுதி உறுப்பினர் டெனிஸ் புவா, முன்னாள் நியமன உறுப்பினர் சியா யோங் யோங் ஆகியோருடன் இக்கலந்துரையாடல் நடந்தேறியது.
வாழ்நாள் கற்றல் வாய்ப்புகள், தொழில் பாதைகள் ஆகியவற்றை எளிதில் நாடுவது குறித்து இரண்டு பணிக்குழுக்களும் ஆராய்ந்து வருகின்றன. அத்துடன் சிறப்புத் தேவைகளுடையவர்கள் தன்னிச்சையாக செயல்பட, வீடுகளிலும் சமூகத்திலும் உள்ள தொழில்நுட்ப, வடிவமைப்பு அம்சங்களைப் பணிக்குழுக்கள் மதிப்பிடவும் செய்யும்.
கொவிட்-19க்குப் பிந்திய காலத்தில் மேலும் பரிவுடைய, அனைவரையும் உள்ளடக்கிய சிங்கப்பூரை எவ்வாறு உருவாக்கலாம் என்பது குறித்துப் பயனுள்ள கருத்துகள் பேசப்பட்டதாக திரு மசகோஸ் தம் ஃபேஸ்புக் பதிவில் நேற்று குறிப்பிட்டார்.
உடற்குறையுள்ளவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உடற்குறை மையமாக இயங்கி வரும் சமூகச் சேவை அமைப்பினர் ஆகியோர் கொள்ளைநோய் சூழலில் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதையும் திரு மசகோஸ் சுட்டினார்.
கொவிட்-19க்குப் பிந்திய சிங்கப்பூரில் எத்தகைய வாய்ப்புகள் உருவாகும் என்பது குறித்தும் அவர்கள் பேசியிருந்தனர்.
பணிக்குழுக்கள் சமர்ப்பிக்கும் திட்டங்களைப் பின்னாளில் நடைமுறைப்படுத்தும்போது தங்களையும் ஈடுபடுத்துமாறு சிலர் ஆர்வத்துடன் தெரிவித்ததாக அமைச்சர் மசகோஸ் கூறினார்.
"தங்களின் ஆற்றலை வெளிப்படுத்தவும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளில் ஈடுபடவும் உடற்குறையுள்ளவர்கள் உந்துதல் பெற வேண்டும். அதற்கு, அனைவரையும் உள்ளடக்கும் ஒரு சமூகம் உருவாக நமது கொள்கைகளை மெருகேற்ற வேண்டும். தொடர்ந்து புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும். இவற்றுக்கெல்லாம் உரையாடலில் பகிரப்பட்ட அவர்களின் யோசனைகளும் கருத்துகளும் கைகொடுக்கும்," என்றார் திரு மசகோஸ்.

