குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பம் ஒன்றின் வீட்டில் தீபாவளி உணர்வை ஏற்படுத்தி உற்சாகத்தைக் கொடுத்துள்ளது ஜாமியாவின் ‘புரோஜெக்ட் ஹேப்பினஸ்’ திட்டம்.
நோன்புப் பெருநாள், கிறிஸ்துமஸ், தீபாவளி, சீனப் புத்தாண்டு போன்ற பண்டிகைகளின்போது எல்லாச் சமயங்களையும் சேர்ந்த வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உதவி, பண்டிகைக்காலத்தில் அவரவர் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாட இந்த மகிழ்வுத் திட்டம் வழிவகுக்கிறது.
தாருல் இஸ்லா எனப்படும் ஜாமியா மறுவாழ்வு இல்லத்தின் குடியிருப்பாளர்கள், இன, சமய நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் இதுபோன்ற தொண்டூழியப் பணிகளில் தங்களை ஈடுபடுத்தி மற்றவரை மகிழ்வித்து அதில் மகிழ்ச்சி காண்கின்றனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு, வசதிக்குறைந்த ஐந்து குடும்பங்கள் பரிந்துரைக்கப்பட்டன. அவற்றில் திருவாட்டி கோமதி சோமசுந்தரத்தின் குடும்பமும் ஒன்று. அவரது வீட்டின் நிலை, அவரின் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திருவாட்டி கோமதியின் வீட்டைப் பார்வையிட்ட டாருல் இஸ்லா குழுவினர், ஒரே வாரத்தில் வீட்டுக்குச் சாயம் பூசி, சுத்தப்படுத்தி, பழுதான மின்சாதனப் பொருள்களுக்குப் பதிலாக புதுப் பொருள்களைப் பொருத்தினர். புதிய சோபா, நாற்காலிகளுடன் வீட்டுக்குப் புதுப்பொலிவு தர உதவிக்கரம் நீட்டினர்.
புதுப்பொலிவு பெற்ற வீட்டை நேற்று திருவாட்டி கோமதியிடம் ஒப்படைத்தபோது சிறப்பு விருந்தினராக மூத்த அமைச்சரும் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் திரு தர்மன் சண்முகரத்தினம் வருகையளித்திருந்தார். அவருடன் ஜூரோங் குழுத்தொகுதி உறுப்பினர் டாக்டர் டான் வூ மெங்கும் இருந்தார்.
தீபாவளியை முன்னிட்டு வீட்டை அலங்கரிப்பது இதுவே முதல் முறை என்று பகிர்ந்துகொண்டார் திருவாட்டி கோமதி. இந்தத் திட்டத்தால் திருவாட்டி கோமதிக்கு பண்டிகை உணர்வு பிறக்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர் டாருல் இஸ்லா குழுவினர்.