இன்று ஆசியான் மாநாடு தொடங்குகிறது. மெய்நிகராக நடைபெறஉள்ள இம்மாநாட்டில் பிரதமர் லீ சியன் லூங், வட்டார நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
பல ஆண்டுகளாக நடந்துவரும் பேச்சுவார்த்தையை அடுத்து, 'வட்டார நிலையிலான விரிவான பொருளியல் பங்காளித்துவம்' வர்த்தக ஒப்பந்தம் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா சென்ற ஆண்டு இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டது. இருப்பினும், அனைத்தும் கைகூடி வந்தால் உலகின் ஆகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாக இது அமைந்திடும் என்றம் கூறப்படுகிறது.
ஆசியானின் 10 உறுப்பு நாடுகளுடன் இந்த ஒப்பந்தத்தில் மொத்தம் 15 நாடுகள் கையெழுத்திடும். இந்த 15 நாடுகளும் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மூன்றில் ஒரு பங்குக்குரியவை என்பது குறிப்பிடத்தக்கது.
கொள்ளை நோய்ச் சூழலிலிருந்து நாடுகள் மீண்டுவருவதற்கான ஆசியான் விரிவான மீட்புக் கட்டமைப்பும் வட்டார நாடுகளின் மருத்துவப் பொருட்களின் இருப்பும் அதிகாரபூர்வமாக மாநாட்டில் தொடங்கி வைக்கப்படும் என்றும் என்று தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள பொதுச் சுகாதார, சமூகப் பொருளியல் சவால்களைப் பற்றி வட்டார நாடுகளின் தலைவர்கள் கலந்தாலோசிப்பதுடன் மீண்டு வருவதற்கான பாதையையும் திட்டமிடுவர் என்று பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை கூறியது.
ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசியான் மாநாட்டுக்கு இவ்வாண்டு வியட்னாம் தலைமை ஏற்றுள்ளது.

