கொவிட்-19 தடுப்பூசி உத்தி தொடர்பில் அரசாங்கத்திடம் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க 14 உறுப்பினர்கள் கொண்ட நிபுணர் குழு ஒன்றை சுகாதார அமைச்சு அமைத்துள்ளது.
சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் பாதுகாப்பாகவும் ஆக்ககரமாகவும் பயன்படுத்தப்படுவதையும் இக்குழு உறுதி செய்யும்.
சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவைப் பிரிவு இயக்குநருக்கு மூத்த ஆலோசகரான இணைப் பேராசிரியர் பெஞ்சமின் ஓங் இந்தக்குழுவிற்குத் தலைமை தாங்குவார் என்று அமைச்சு நேற்று வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்தது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மூத்த துணைத் தலைவர் (சுகாதாரக் கல்வி மற்றும் வளங்கள்) பதவியையும் அவர் வகிக்கிறார்.
தொற்றுநோய், நோய்த்தடுப்பு போன்ற சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த நிபுணர்களும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். தலைமைச் சுகாதார விஞ்ஞானியும் சுகாதார அமைச்சின் சுகாதாரப் பராமரிப்பு உருமாற்ற அலுவலகத்தின் நிர்வாக இயக்குநருமான பேராசிரியர் டான் சோர் சுவான், சிங்கப்பூர் மருத்துவ ஆய்வு, புத்தாக்கக் கூட்டமைப்பின் தலைமை நிர்வாகி டாக்டர் டேனி சூன், பொருளியல் வளர்ச்சிக் கழகத்தில் சுகாதாரப் பராமரிப்பு, நல்வாழ்வுப் பிரிவுத் துணைத் தலைவர் டாக்டர் லிசா வி உள்ளிட்டோர் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.
"தடுப்பூசிகளை மதிப்பிடும் முயற்சியில் இந்த நிபுணர் குழு ஈடுபடுவதோடு சிங்கப்பூரில் அவை கிடைக்கும்போது கொவிட்-19க்கு எதிரான பொருத்தமான தடுப்பூசிகளை இக்குழு பரிந்துரைக்கும்," என்று அமைச்சு கூறியது.
கொவிட்-19 தடுப்பூசிகள் குறித்த ஆக அண்மைய தகவல்களைக் கருத்தில் கொண்டு மதிப்பிடுவதே இக்குழுவின் பொறுப்பு என்று அமைச்சு விவரித்தது.
தடுப்பூசிகள் குறித்த ஆக அண்மைய மருத்துவத் தகவல்கள் வெளிவரும்போது அவற்றின் பாதுகாப்புத்தன்மை, திறன், சிங்கப்பூர் மக்கள்தொகையின் வெவ்வேறு பிரிவினர் பயன்படுத்த அவற்றின் பொருத்தம் போன்ற அம்சங்களை இந்தக் குழு மதிப்பிடும்.
அதன் பிறகு மக்கள்தொகையின் குறிப்பிட்ட பிரிவினருக்குத் தடுப்பூசிகளை வழங்குவது குறித்த பரிந்துரைகளை இக்குழு அளிப்பதோடு, சிங்கப்பூருக்கான ஒட்டுமொத்த தடுப்பூசி உத்தி குறித்தும் அது விவரிக்கும்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இக்குழு அறிவிக்கப்பட்டது. இந்தக் குழுவின் நியமனம் அக்டோபர் 5ஆம் தேதி நடப்புக்கு வந்ததாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
அக்டோபர் 13ஆம் தேதி இந்த நிபுணர் குழு முதன்முறையாக கூடியது. பரிசோதனை கட்டத்தில் உள்ள பல்வேறு தடுப்பூசிகள் குறித்து கலந்தாலோசிக்க கடந்த மாதம் இக்குழு பலமுறை சந்தித்தது. மேலும், சிங்கப்பூர் சூழலில் தடுப்பூசிகளைப் பயன்படுத்துவது குறித்தும் இக்குழு கலந்தாலோசித்து வருகிறது.

